புதுதில்லி:
கிழக்கு தில்லி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும்,முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், ஆரம்பம் முதலே சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறார்.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் அதிஷி குறித்து,மோசமான கருத்துக்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை கம்பீர் விநியோகித்தார் என்று ஏற்கெனவே சர்ச்சை எழுந்தது. இதற்கு பதிலளித்த கம்பீர், தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தூக்கில் தொங்கத்தயார் என்று ஆவேசப்பட்டார்.
இதனிடையே, வெயில் காரணமாக மக்களை நேரில் சந்திப்பதற்கு பயந்து, தன்னைப் போல உருவம் கொண்ட ஒரு நபரை கம்பீர் பிரச்சாரத்திற்கு பணியமர்த்தினார் என்ற புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது.இதுதொடர்பான புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் கம்பீர், காருக்குள் அமர்ந்திருக்கிறார். ஆனால், கறுப்பு நிறத் தொப்பி அணிந்துகொண்டு கம்பீர் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஒருவர் மக்களை நோக்கி கையசைத்தபடி பிரச்சாரம் செய்கிறார்.
இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியினர்,வெயிலில் நின்று பிரச்சாரம் செய்ய முடியாதவர் எப்படி மக்களுக்காக உழைக்கப் போகிறார்? என்று கேள்விகளை எழுப்பியுள்ளனர்.