புதுச்சேரி,பிப்.17- மருத்துவ நுழைவுத் தேர்வு இனி தனியாக நடக்காது என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவம் படிக்க விரும்புபவர்களுக்கு தனியாக தேசிய அளவில் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் மத்திய அரசு வரும் கல்வி ஆண்டு முதல் ஜிப்மர் உள்ளிட்ட அனைத்து தேசிய நிறுவனங்களுக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட்தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுவர் என்று அறிவித்தது. ஆனாலும் புதுச்சேரியில் உள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு சந்தேகம் தொடர்ந்து இருந்து வந்தநிலையில், மருத்துவ கல்வியில் சேர நுழைவுத்தேர்வு இனி தனியாக ஜிப்மர் நிர்வாகம் சார்பில் நடைபெறாது என்று அறிவித்துள்ளது. நீட் தேர்ச்சியின் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கைக்கு (எம்.பி.பி.எஸ்) மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.