புதுச்சேரி, ஜூன். 29- கட்டுமான நல வாரிய உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்ட கொரோனா கால நிவாரண நிதி முழுமையாகச் சென்றடையவில்லை என்று சிஐடியு தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் புதுவை பிரதேச பொதுசெயலாளர் கே.கலியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாகக் கட்டுமான தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்படுகின்றனர். வேலைக்குச் சென்றாலும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கிறது. அதனால் கடுமையான பசி பட்டினியால் வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தொகை ரூ.2000 தகுதி உள்ள பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை.
கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில் கட்டுமான வேலை நடைபெறவில்லை. இப்படிப்பட்டநிலையில்லாத சூழலில் கட்டுமான தொழிலாளிகள் நிவாரண நிதியைப் பெறுவதற்காகக் கட்டுமான நல வாரியத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். வரும் தொழிலாளர்களுக்கு முறையான பதில் எதுவும் இல்லை. மாறாக மீண்டும் விண்ணப்பம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வதும், விண்ணப்பம் எழுதிக் கொடுத்தாலும் எந்தவித பலனும் இல்லாமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த போக்கை இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பேரிடர் கால நிவாரணம் என்பது உரியக் காலத்தில் வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கப்படாமல் தொழிலாளர்களை இழுத்தடிக்கப்படுவது தொழிலாளர் விரோத நடவடிக்கையாகும்.
அதே நேரத்தில் புதுச்சேரியில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் கொரோனா கால நிவாரணத்தொகை அரசு அதிகாரிகளால் முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை முழுமையாக வழங்கப்படாத நிலையில் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டதைப் போல முறைகேடு நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை ரூபாய் 2 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும். இல்லையென்றால் தொழிலாளர்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.