tamilnadu

img

கொரோனா பாதித்தவர்களில் 75% பேருக்கு அறிகுறியே இல்லை முதல்வர் கெஜ்ரிவால் பேட்டி

புதுதில்லி, மே 10- தில்லியில் கொரோனா பாதித்தவர்களில் 75 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தில்லியில்  கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 75 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை அல்லது லேசான அறிகுறிகள் கொண்டவர்கள் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.  தில்லி அரசு கொரோனா பாதிப்பால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையை  மிகவும் குறைத்து வெளியிடுவதாகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜய்மக்கான் சனிக்கிழமை குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும்,  தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்  எனவும் வலியுறுத்தியிருந்தார்.  தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி முதலமைச்சர் “உண்மையைச் சொல்ல வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.  இந்தச் சூழலில், கெஜ்ரிவால் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.  தில்லியில் கொரோனா பாதிப்பால் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். 6,923 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது, 2,069 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 91 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் 27 பேர் வெண்டிலேட்டர் சிகிச்சையிலும் உள்ளனர் என்று கெஜ்ரிவால் கூறினார்.  இறந்தவர்களில் 82 சதவீதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், மூத்த குடிமக்கள் நோய்த்தொற்றுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.