புதுச்சேரி: 17வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி துவங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக அரசின் தவறான மக்கள் விரோதகொள்கை, பண மதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி போன்ற தவறான திட்டங்களால் புதுச்சேரி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வட மாநிலங்களில் நடைபெற்ற சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் புதுவை மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தியது. புதுச்சேரி மக்களின் நாடி துடிப்பை தெரிந்து கொண்ட பாஜக, அதிமுக கூட்டணி தங்களுக்கு எந்தவிதத்திலும் இத்தேர்தலில் பயன்தராது என்பதை புரிந்து கொண்டது. எனவே புதுச்சேரி மக்களவை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தள்ளிவிட்டது.கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு என்.ஆர்.காங்கிரஸ் மக்களுக்காக ஆக்கப்பூர்வமாக எந்தநலத்திட்டங்களை கொண்டுவருவதற்கும் குரல் கொடுக்கவில்லை. அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும்துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் அடாவடிக்கு துணையாக இருந்தது. இந்த தேர்தலுக்கு முன்பு வரை மாநில அந்தஸ்து, அரசு சார நிறுவனஊழியர்களின் பல மாத ஊதிய பிரச்சனை, ஆளுநரால் தடுக்கப்பட்ட இலவச அரிசி திட்டம் என எந்த திட்டத்தையும் பெறுவதற்கு முயற்சிக்கவில்லை. அதேசமயம், மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவித்ததும் கூட்டணிகட்சித் தலைவர்களை அழைக்காமல் தனது தேர்தல் பணியை துவக்கினார். அதன்பிறகே, இந்த தொகுதி என்ஆர் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அரசியல் அனுபவமில்லாத மருத்துவக் கல்லூரியின் உரிமையாளரான நாராயணசாமியை வேட்பாளராக அறிவித்தது. மதச் சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் இந்த தொகுதி ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது. முன்னாள் முதலமைச்சர், புதுவை மக்களிடம் நன்கு அறிமுகமான வைத்திலிங்கத்தை அந்த கட்சி வேட்பாளராக களம் இறக்கியது. இதற்காக அவர் தனது சபாநாயகர் பதவியை ராஜினமா செய்து தேர்தல் களத்தை சூடுபடுத்தினார். என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு கிளியை ஏற்படுத்தியது.புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற என்ஆர். காங்கிரஸ் கட்சியின் அசோக் ஆனந்து சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். இதனால் இந்ததொகுதிக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.ரங்கசாமியின் கோட்டை என்றுகூறப்பட்ட தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியனை வேட்பாளராக அறிவித்தது. மதச் சார்பற்ற கூட்டணி சார்பில் திமுகவின் வெங்கடேசன் போட்டியிட்டார்.திமுக,காங்கிரஸ்,சிபிஎம்,சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகளை உள்ளடக்கிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிகளின் அகில இந்திய, மாநில, மாவட்ட, உள்ளூர் தலைவர்கள், தொண்டர்கள் தினமும் தெரு தெருவாக சென்று மக்களை சந்தித்து காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங் கத்திற்கு ஆதரவு திரட்டினர். சிபிஎம் சார்பில் சப்தர்ஹஸ்மி கலைக்குழுவின் அரசியல் நையாண்டி பாடல்களின் பிரச்சாரம் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. இதனால், புதுச்சேரி மக்கள் மத்தியில் ஆதரவு அதிகமானது.
மதவெறிக்கு இடமில்லை!
இடது சாரி இயக்கங்கள் வீரம்செரிந்த போராட்டம் நடத்தியமண் புதுச்சேரி. பாரதி,பாவேந்தர்,சுப்பையா போன்ற தலைவர்கள் வாழ்ந்த பிரதேசம் புதுச்சேரி. இங்கு பல்வேறு சமய சார்பற்றவர்கள் மத ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படாமல், மத நல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாக இன்றுவரைக்கும் வாழ்ந்துவருகிறார்கள். மத வெறி கூட்டத்திற்குஇங்கு இடம் இல்லை. அது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி உருவத்தில் பாஜக வந்தாலும் அவர்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று மக்கள் தெளிவாக இருந்தனர்.திமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியாத என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக,பாஜக கூட்டணி பல இடங்களில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தது.
பாஜகவின் பகல் கனவு...
அரசு எந்திரங்களை தங்களுக்கு சாதகமாக கையில் வைத்துக் கொண்டுள்ள துணை நிலை ஆளுநரைக் கொண்டு ஆளும் கட்சிக்கு எதிராக செயல்பட்டு, மக்களின் ஆதரவை மாற்றிவிடலாம் என்று மணப்பால் குடித்த பாஜகவின் கனவும் பொய்த்துப்போனது.மதச்சார்பற்ற முற்போக்குகூட்டணியின் மக்களவை வேட்பாளர்வைத்திலிங்கத்திற்கு புதுச்சேரியிலுள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் அதிகமாக வாக்குகளை பதிவு செய்திருந் தனர். இறுதிச் சுற்றுவரைக்கும் முன்னிலையில் இருந்த அவர், என்ஆர் காங்கிரஸ் வேட்பாளரைக் காட்டிலும் 1,97,025 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
சரிந்தது கோட்டை
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.வெங்கடேசன் 10,906 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியன் 9367 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இந்த வெற்றியின் மூலம் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமியின் கோட்டை என்று கூறப்பட்ட தட்டாஞ்சாவடியில் ஓட்டையை ஏற்படுத்தினர்.இந்த இருவரின் வெற்றியும் புதுச்சேரி மக்கள் என்றென்றைக்கும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவோம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர்.