தலைநகர் தில்லியின் மேற்கு பகுதியான மேற்கு தில்லியின் திலக் நகர் பகுதியில் கடந்த ஒரு வார காலத்தில் தங்களின் பணம் திருடப்பட்டு விட்டதாக 87 மக்கள் புகார் அளித்துள்ளனர். இந்த திருட்டு குறைந்தது 3 ஏ.டி.எம். இயந்திரங்கள் மூலம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இந்த திருட்டுச் சம்பவம் ஸ்கிம்மர் என்ற கருவியின் மூலம் ஏ.டி.எம். பயனாளர்களின் தகவலை திருடி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தில்லி போலீசார் சைபர் கிரைம் பிரிவு காவல்துறையை அணுகியுள்ளது. ஒரு கணக்கிலிருந்து 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் சுமார் 16 தனியார் வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களின் பணம் திருடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த சைபர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், திலக் நகர் காவல்துறை தரப்பில் ஐ.பி.சி பிரிவு 420 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேற்கு தில்லி துணை காவல் ஆணையர் மோனிகா பரத்வாஜ் கூறியுள்ளார்.