அரிய நிகழ்வான நிழல் இல்லா நாளை, புதுச்சேரியில் இன்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
சூரியன் நேர் உச்சிக்கு வருவதால் ‘நிழல் இல்லா நாள்’ (பூஜ்ஜிய நிழல்) என்று அழைக்கப்படுகிறது. சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால் சூரியன் எப்போதும் சரியாக தலைக்கு மேல் வருவதில்லை. ஆண்டுக்கு இருமுறை மட்டுமே வரும். சூரியன் செங்குத்தாக வரும்போது, ஓரிடத்திலுள்ள ஒரு பொருளுடைய நிழலின் நீளம், ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியமாகிறது. அந்த நாளையே நிழல் இல்லாத நாள் என்று வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த அரிய, அதிசய நிகழ்வானது அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் நிகழ்வதில்லை.
இந்த நிலையில், புதுச்சேரியில், ‘நிழல் இல்லா நாளை’ மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். புதுவை அறிவியல் இயக்கம் சார்பில் ஃபாத்திமா மேல்நிலைப் பள்ளியில் இந்த அரிய நிகழ்வை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.