tamilnadu

img

மக்கள் நலத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி கோரி புதுச்சேரியில் சிபிஎம் பிரச்சாரம்

புதுச்சேரி,பிப்.3- மக்கள் நலத்திட்டங்களுக்கு மத்திய-மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி புதுச்சேரியில் சிபிஎம் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது. மத்திய பாஜக அரசு  புதுச்சேரி மாநில கடனை உடனே தள்ளுபடி செய்யவேண்டும். புதுச்சேரிக்கு வழங்க வேண்டிய சிறப்பு நிதியை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். என்ஏஏ, தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகளை முழுமையாக கைவிட வேண்டும்.  புதுச்சேரி மாநில மக்களின் எண்ணங்களுக்கு விரோதமாக செயல்படும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும். மாநில  அரசு  குப்பை வரியை திரும்பப்பெற வேண்டும். ஏஎப்டி,சுதேசி,பாரதி ஆகிய பஞ்சாலைகளை புணரமைத்து புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணத்திற்கு பதில் அரிசியை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி பிரதேசம் மற்றும் காரைக்காலில் இப்பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி பாகூர் கடைவீதியில் துவங்கிய பிரச்சாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் நெட்டப்பாக்கம் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். சிபிஎம் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார். பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், பிரதேசக்குழு உறுப்பினர்கள் சரவணன், இளவரசி, கொம்யூன்குழு உறுப்பினர்கள் சண்முகம், செல்வராசு, முத்துலிங்கம், அரிதாஸ், வெங்கடாச்சலம்,பக்கிரி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக பாகூர் சோரியாங்குப்பம், குருவிநத்தம், கரையாம் பத்தூர், மடுகரை, ஏம்பளம், கரிகலாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது.இப்பிரச்சாரம் புதுச்சேரியில் பிப்ரவரி 6 வரை நடைபெறுகிறது.