புதுக்கோட்டை, செப்.9- கணினி அறிவு, சுற்றுச்சூழல் கல்வி உள்ளிட்ட மையப் பொருளை உள்ளடக்கி இரண்டாவது அறிவொளி இயக்கம் நடத்துவதற்கு புதுக்கோட்டை மாவட்டம் தயாராகிறது. அறிவொளி இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திய நண்பர்கள் ஒருங்கிணைந்து உலக எழுத்தறிவு தின விழாவை புதுக்கோட்டை அருகே திருமலைராய சமுத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் க.சதாசிவம் தலைமை வகித்தார். இதில் கலந்துகொண்டு அறிவொளி இயக்கத்தின் முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளருமான ஆர்.ராஜ்குமார் சிறப்புரையாற்றினார். அவர்கள் பேசும்போது, எழுத்தறிவின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காக 1966-ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 8 உலக எழுத்தறிவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவொளி இயக்கம், தொடர்கல்வி இயக்கம் மற்றும் வளர்கல்வி இயக்கம் என 3 கட்டமாக 15 ஆண்டுகள் நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலிருந்து சுமார் 45000 தன்னார்வத் தொண்டர்கள் பங்கெடுத்த அறிவொளி இயக்கம் எழுத்தறிவு, எண்ணறிவு, விழிப்புணர்வுக்கா மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. இந்நிலையில், அறிவொளி இயக்கத்தில் பணியாற்றியவர்களை ஒருங்கிணைத்து “இரண்டாவது அறிவொளி இயக்கம்” தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கணினி அறிவு, பருவகால மாற்றம், மற்றும் சுற்றுச்சுழல் கல்வி, அறிவியல் விழிப்புணர்வு உள்ளிட்டவற்றை மையப்பொருளாக வைத்து இரண்டாவது அறிவொளி இயக்கம் இருக்கும். இதற்கான திட்டமிடல் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது என்றார். நிகழ்ச்சியில் அறிவொளி இயக்கத்தின் முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.விவேகானந்தன் வாழ்த்துரை வழங்கினார். உலக எழுத்தறிவு தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சுமார் 600 அறிவொளி தெண்டர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். முன்னதாக கே.பானுமதி அனைவரையும் வரவேற்க, இ.பவுனம்மாள் நன்றி கூறினார்.