புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே திருக்கட்டளை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள தனியார் வங்கியில்(பஞ்சாப் நேஷனல் வங்கி) அலுவலக உதவியாளராக கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் மாரிமுத்து கடந்த 22ந் தேதி வீட்டில் இருந்து தனது காரில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை எனக்கூறி மாரிமுத்துவின் மனைவி ராணி புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் மாரிமுத்துவின் கார் வல்லத்திராக்கோட்டை தைலமர காட்டு பகுதியில் எரிந்த நிலையில் கிடந்தது. காரில் கவரிங் வளையல்கள் மற்றும் ஒரு ஹார்ட் டிஸ்க் கிடந்தது.
மேலும் மாரிமுத்து திடீரென மாயமானதால் அவர் வங்கியில் இருந்து நகைகளை எடுத்து சென்று இருக்கலாம் என வங்கி அதிகாரிகள் சந்தேகப்பட்டு நகைகள் சரியாக உள்ளதா என கடந்த 4 நாளாக ஆய்வு செய்தனர். நகைகளை மாரிமுத்து எடுத்து சென்றதாக பரவிய செய்தியால் வங்கியில் நகைகளை அடகு வைத்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் வங்கியில் குவிய தொடங்கினர். இதற்கிடையே மணமேல்குடி கோடியக்கரை கடலில் ஆண் சடலம் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதில் இறந்தவர் மாரிமுத்து எனத் தெரிந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.