tamilnadu

img

குடிசையிலிருந்து கோட்டைக்குள்...

தமிழ்நாட்டின் 16-வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் செவ்வாயன்று மே 11 கூடியது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்து தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அப்போது அனைவரது மனங்களையும் தொட்டவர்கள் இரண்டு உறுப்பினர் கள். அதில் ஒருவர் மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.சின்னதுரை, மற்றொருவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாரிமுத்து.நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.  அந்த தொகுதியில் எம்.சின்னதுரையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களமிறக்கியது.நிலம், தங்கம், வங்கிக் கையிருப்பு என அசையும், அசையாச் சொத்துகள் எதுவும் இல்லாமல் மக்களையும் ‘தோழர்’களையும் மட்டுமே நம்பித் தேர்தல் களம் கண்டார். அவரது தேர்தல் செலவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே முழுமையாக செய்தது.தனித்தொகுதியில் நிறுத்தப்பட்ட அவர், அதிமுக வேட்பாளர் ஜெயபாரதியை விட 12,721 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதன் மூலம் மாவட்டத்தின் முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவாக சின்னதுரை தேர்வு செய்யப்பட்டுள் ளார். இன்றைக்கும் அவரது மனைவி 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்குச் செல்வது குறிப்பிடத்தக்கது.தனது வேட்பு மனு வின் போது ஓட்டு வீட்டைத்தவிர வேறு எந்த சொத்துமில்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள் ளார். எளிய குடும்பத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ள சின்னதுரையை பல்வேறு கட்சியினர், தொழிலாளர்கள், கிராம மக்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சின்னத்துரையின் மனைவி விவசாயக் கூலியாக 100 நாள் வேலைக்குச் சென்று வருகிறார். பத்தாம் வகுப்பு வரை படித்த சின்னத்துரை கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார். கட்சி கொடுக்கும் சிறு தொகையை கொண்டு தான் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.இந்திய வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக மக்கள் பணியை துவக்கிய சின்னதுரை கட்சியின் மாவட்ட செயலாளராக பணியாற்றியவர். தற்போது மாநிலக்குழு உறுப்பினராகவும் விவசாயத் தொழிலாளர்களை அணிதிரட்டும் பொறுப்பையும் கவனித்து வருகிறார். ஒரு மகன் பொறியியல் முடித்துவிட்டு பணிக்காகக் காத்திருக்கிறார். இன்னொரு மகன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

மாரிமுத்து
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி சட்டமன்ற தொகுதியில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.மாரிமுத்து போட்டியிட்டார்.இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமாரை விட 29,102 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். எம்எல்ஏவான மாரிமுத்துவின் சொந்த ஊர் திருத்துறைப்பூண்டியில் இருந்து 15 கி.மீ. தூரமுள்ள கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த காடுவாகுடி கிராமம். கூரை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா. தாய் 
தங்கம்மாள். விவசாய கூலி தொழிலாளர் கள். தனது மகன் குடிசையிலிருந்து கோட்டைக்கு செல்வது கூட அவரது தாயாருக்கு தெரியாது அந்த அளவுக்கு அறியாமை. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் மாரிமுத்து.

இரு எம்எல்ஏக்களும் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் குடிசைகளில் வசித்து வரும் திருத்துறைப் பூண்டி, கந்தர்வகோட்டை எம்எல்ஏக்கள் மாரிமுத்து, சின்னதுரை கோட்டைக்குள் சென்று சட்டமன்ற உறுப்பினர்களாக உறுதிமொழியை ஏற்று செங்கொடியின் பெருமையை உயர்த்திப் பிடித்தனர்.