புதுக்கோட்டை: மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலமாக முக கவசம் உற்பத்தி செய்து சுகாதார துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு வழங்கப்படுகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்தது: புதுக்கோட்டை பூமாலை வணிக வளாகத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவின் மூலம் முகக் கவசம் தயாரிக்கும் பணி பார்வையிடப்பட்டது. இப்பணியினை புதுக்கோட்டை, கீரனூர், விராலிமலை ஆகிய பகுதிகளில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். ஒருவாரத்திற்கு சுமார் 50,000 எண்ணிக்கையிலான முக கவசங்கள் தயாரித்து நகராட்சி, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு வழங்கப்படுகிறது. பொதுமக்கள் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் பொதுஇடங்களுக்கு செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். தனித்து இருப்பதையும் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஆய்வின் போது நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன், மகளிர் திட்ட இயக்குநர் லலிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.