tamilnadu

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா சிறந்த புத்தகங்ளுக்கான விருதுகள் அறிவிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி சிறந்த புத்தகங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புத்தகத்திருவிழா ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நான்காவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா பிப்.14 முதல் 23-ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற்று வருகிறது. புத்தகத் திருவிழாவையொட்டி கடந்த 2018, 2019 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்க திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் வரப்பெற்ற புத்தகங்களில் நடுவர் குழுவினரால் தேர்வுசெய்யப்பட்ட பட்டியல் வெளியிடப்படுகிறது. அரசியல், சமூகம், வரலாறு குறித்த கட்டுரைப் பிரிவில் பாரதி புத்தகாலயம் வெளியீட்டின் மு.ஆனந்தன் எழுதிய பூஜ்ஜியநேரம், கலை, இலக்கியம், கல்வி, அரசியல் பிரிவில் எழுத்தாணி வெளியீட்டகத்தின் அ.அரிமாப்பாமகன் எழுதிய இயம்பும் எம்மொழி, கவிதை பிரிவில் காலச்சுவடு பதிப்பகத்தின் எம்.எம்.பைசல் எழுதிய வாப்பாவின் மூச்சு, சிறுகதை பிரிவில் தூறல் வெளியீட்டகத்தின் சந்தியூர் கோவிந்தன் எழுதிய தாத்தாவின் ஞாபகம், புதினம் பிரிவில் அன்னை ராஜேஸ்வரி பதிப்பகத்தின் புதிய மாதவி எழுதிய பச்சைக்குதிரை ஆகிய புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள. தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு புத்தகத்திற்கும் விருதுப் பட்டயத்துடன் ரூ.5000  ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. வருகின்ற 23.02.2020 அன்று நடைபெறும் புத்தகத்திருவிழா மேடையில் சான்றோர்களால் விருதுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;