tamilnadu

அறுவை சிகிச்சை இல்லாமல் பெண்ணுக்கு சிறுநீரக கல் அகற்றம்

புதுக்கோட்டை, பிப்.20- தஞ்சாவூர் பூண்டி நகரைச் சேர்ந்தவர் மாலா (39). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவரை பரி சோதித்த மருத்துவர்கள் அவருக்கு வலது பக்க சிறுநீரகத்தில் கல் இருப்பதை கண்டறிந்தனர்.  இந்த கல்லை அறுவை சிகிச்சை இல்லாமல் அகநோக்கி மூலம் அகற்ற தீர்மானித்து, மருத்துவக் கல்லூரி டீனும், மயக்க மருத்துவருமான மீனாட்சி சுந்தரம் தலைமையில் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள் செந்தில்நாதன், லதா மற்றும் மயக்க மருத்துவர்கள் டேவிட், சரவணன் ஆகியோர் இணைந்து இந்த சிகிச்சையை மேற்கொண்டனர்.  இதைத்தொடர்ந்து மாலாவிற்கு அகநோக்கி மூலம் கல் அகற்றும் சிகிச்சை நடைபெற்றது. முதலில் சிறுநீரக தாரை வழியாக ஒரு குழாய் செலுத்தப்பட்டு கல் கிழே நகராமல் நிலை  நிறுத்தப்பட்டது. பின்னர் அவரின் முதுகு பக்கமாக ஒரு ஊசியை வைத்து “சி ஆர்ம்” என்று சொல்லக் கூடிய சிறப்பு கருவி மூலம் அந்த கல் இருக்கும் இடத்தை கண்டறிந்து, அதை அகநோக்கி மூலம் உடைக்கப்பட்டது. இந்த சிகிச்சை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. மேலும் ரத்த போக்கை கட்டுப் படுத்துவதற்காக ஒரு சிறு குழாய் சிறுநீரகத்தில் பொருத்தப் பட்டது. தற்போது மாலா நலமாக உள்ளார்.  இது குறித்து மருத்துவ கல்லூரி டீன் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், சாதாரணமாக சிறுநீரக வழியில் இருக்கும் கற்கள் அகநோக்கி மூலம் உடைக்கப்படும். ஆனால் இவருக்கு சிறுநீரகத்தில் கல் இருந்த காரணத்தினால் இதை அறுவை சிகிச்சை மூலம் தான் அகற்ற வேண்டும். அறுவை சிகிச்சை  செய்த இடத்தின் வழியாக குடல் இறக்கம் வருவதற்கு வாய்ப்புண்டு.  எனவே இதை அகநோக்கி மூலம் அகற்ற தீர்மானித்தோம். தற்போது இங்கு அகநோக்கி இல்லாத நிலையில் இவருக்கு பிரத்யேகமாக வெளியில் இருந்து அந்த கருவி வரவழைக்கப் பட்டது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இந்த சிகிச்சை புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியில் இதுதான் முதன் முறையாக செய்யப்பட்டு உள்ளது. இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.1 லட்சம் வரை செலவாகலாம் என்றார். பயிலரங்கம் அறந்தாங்கி, பிப்.20- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் இரா.கண்ணன் தலைமை ஏற்று துவக்கி வைத்தார். ஜேசிஜ தேசிய பயிற்சியாளர் முனைவர் ஜி.சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்க்கையின் மொழியை அறிவோம் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். பயிலரங்கில் பல்துறை மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.