tamilnadu

விவசாயிகள் மரக்கன்றுகளை இலவசமாக பெறலாம்

புதுக்கோட்டை, செப்.18- புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பனை மற்றும் பலன் தரும் மரக்கன்றுகளை பெற்று பயன்பெறலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்து ள்ளதாவது: நிலத்தடி நீரை பாதுகாக்கும் பாதுகாவலனாக விளங்கும் பனை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்கு, முதற்கட்டமாக நடப்பாண்டில் 10 கோடி ரூபாய் செலவில் 2.5 கோடி பனை விதைகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 லட்சம் பனை மர விதைகள் விநியோகத்திற்காக 32 லட்சம் ரூபாய் நிதியினை அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், நடப்பாண்டில் ஹெக்டேருக்கு ரூ.100 மதிப்புள்ள வாகை, தேக்கு, புளி, வேம்பு, இலுப்பை, மகாகனி, ஈட்டி போன்ற பலன்தரும் மரங்களின் கன்றுகளும் இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் எண்பதாயிரம் (80,000) பயன்தரும் மரங்களின் கன்றுகள் விநியோகத்திற்காக 16 லட்சம் ரூபாய் நிதியினை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. எனவே, மானாவாரி விவசாயிகள் அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தில் சேர்ந்துள்ள பனை மற்றும் இதர பயன்தரும் மரக்கன்றுகளைப் பெற்று பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.