tamilnadu

img

தொழிற்சங்கத்தில் இணைந்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டத்தைக் கண்டித்து சிஐடியு காத்திருக்கும் போராட்டம்...

புதுக்கோட்டை:
தொழிற்சங்கத்தில் இணைந்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு சேர்க்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில்புதுக்கோட்டை மாவட்டம் ஊனையூரில் செவ்வாய்க்கிழமையன்று காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்து உள்ளது‘ஈஐடி பாரி நியூட்ரா சியூட்டிக் கல்ஸ்’ என்ற தனியார் ஊக்க மருந்து தொழிற்சாலை. இந்த ஆலையில் 60 நிரந்தரத் தொழிலாளர்களும், 300 ஒப்பந்தத் தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர். நிரந்தரத் தொழிலாளர்கள் ஏற்கனவே சிஐடியு சங் கத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ஓப்பந்தத் தொழிலாளர் களுக்கு மிகக்குறைந்த அளவே கூலி வழங்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை கால போனஸ்கூட  வெறும் நூறு ரூபாய் மட்டுமேவழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் புதுக் கோட்டை மாவட்ட பொதுத் தொழிலாளர் சங்கத்தில் (சிஐடியு) சிலதினங்களுக்கு முன்பாக இணைந்தனர். சங்கத்தின் சார்பில் சில கோரிக்கைகளும் நிர்வாத்திற்கு முன் வைக்கப்பட்டது. இது, ஆலை நிர்வாகத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஆத்திரமடைந்த நிர்வாகம் சங்கத்தின் முன்னணி ஊழியர்களாக பணியாற்றிய மணிகண்டன், அருளாந்து ஆகியஇரண்டு பேரை வேலை வரக் கூடாது என உத்தரவிட்டு வெளியேற்றியது. 

இத்தகைய தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், மேற்படி இருவரையும் மீண்டும்வேலைக்குச் செல்லும்வரை தாங்களும் பணிக்கு செல்லமாட்டோம் என வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் செவ்வாய்க்கிழமையன்று ஆலை முன்பாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் சி.அன்புமணவாளன், எஸ்.யாசிந்த்,சி.மாரிக்கண்ணு, அழகப்பன், ரெத்தினவேல், வீரமணி, டி.சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.