புதுக்கோட்டை, மே 14-ச மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், கறம்பக்குடி பேரூராட்சியின் முன்னாள் தலைவருமான தோழர் எம்.உடையப்பன் (71) புதன்கிழமையன்று மாரடைப்பால் காலமானார். வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் எம்.உடையப்பன். கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக பொதுவாழ்வில் தன்னை கரைத்துக் கொண்டவர். விவசாயிகளின் உரிமைகளுக்காக, விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் எண்ணற்ற போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தியவர். கட்சியின் ஒன்றுபட்ட ஆலங்குடி தாலுகா செயலாளர், கற்பக்குடி ஒன்றியச் செயலாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி கிராமங்கள் தோறும் கட்சியை வளர்த்தவர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கங்களில் மாவட்டத் தலைவர், செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வர்க்க வெகுஜன அமைப்புகளை வளர்த்தெடுத்தவர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாட்டை அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளராக இருந்து புதுக்கோட்டையில் வெற்றிகரமாக நடத்தியவர். கறம்பக்குடி பேரூராட்சியின் தலைவராக இரண்டு முறை மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கறம்பக்குடி வட்டாரத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர்கள் என பல்வேறு உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வெற்றி பெற்றதற்கு அரும்பாடுபட்டவர். கறம்பக்குடி ஒன்றியம், கறம்பக்குடி தாலுகா உருவாக அனைத்துக் கட்சியினரையும் இணைத்துக் கொண்டு சாதித்தவர்.
பள்ளிகள், மருத்துவமனைகளின் கட்டமைப்பு உள்ளிட்ட கறம்பக்குடி மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டவர். 71 வயதிலும் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவராகவும் ஒரு இளைஞரைப் போல சுறுசுறுப்புடன் செயலாற்றி வந்தவர். சாதாரண ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களுடன் இரண்டறக் கலந்து மக்கள் தலைவராக உயர்ந்தவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தோழர் எம்.உடையப்பனுக்கு கடந்த புதன்கிழமையன்று பிறந்தநாள். பிறந்த நாளை குடும்பத்தினருடன் எளிமையாகக் கொண்டியவருக்கு அன்று மாலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பால் காலமானார்.
அனைத்துக் கட்சியினர் அஞ்சலி தோழரின் மறைவுக்கு கறம்பக்குடி வட்டாட்சியர் ஷேக்அப்துல்லா நேரில் அஞ்சலி செலுத்தியதோடு, மக்களுக்காக அவர் ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னத்துரை, திமுக மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பா.ஆறுமுகம், சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் ஜி.நீலமேகம், விதொச மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம், விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன், சிபிஐ புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மு.மாதவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் விடுதலைக்கனல், சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி, அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் கருப்பையா, ஓய்வுபெற்ற உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சிவ.திருமேனிநாதன், உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் சண்முக பழனியப்பன், காங்கிரஸ் நகரத் தலைவர் ரெங்கநாதன், மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் ஆரோக்கியசாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுச்சாமி, ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன் உள்ளிட்டோர் புகழஞ்சலி உரை நிகழ்த்தினர்.
கே.பாலகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தோழர் எம்.உடையப்பனின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல. ஓட்டுமொத்த உழைப்பாளி மக்களுக்கும் பேரிழப்பு. அனைத்துப் பகுதி மக்களுடனும் நெருங்கிப் பழகிய அவர் கட்சிக்கு மட்டுமல்லாது பொதுவான மக்கள் தலைவராக உயர்ந்து நின்றார். கட்சியின் சின்னத்தில் இரண்டு முறை கறம்பக்குடியின் பேரூராட்சி மன்றத் தலைவராக மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்தனர் என்றார். மேலும், தொலைபேசி வாயிலாக குடும்பத்தினரை தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்த அவர், ஊரடங்கின் காரணமாக நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத வருத்தத்தையும் தெரிவித்தார். கட்சியின் அரசில் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.பத்மநாபன், உ.வாசுகி, பி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எம்என்எஸ்.வெங்கட்ராமன், பி.சண்முகம், ஏ.லாசர், மதுக்கூர் ராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஸ்ரீதர், வி.மாரிமுத்து, டி.ரவீந்திரன், வி.மணிவேல், நாகை மாலி உள்ளிட்டோரும் தோழரின் மறைவுக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளனர்.