tamilnadu

img

பீகார், உத்தரபிரதேசத்தில் இடி மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்தது

பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் இடி மின்னல் தாக்கியதில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
பீகாரில் இந்த இடி, மின்னல் விபத்து காரணமாக 92 பேர் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் உத்தரப் பிரதேசத்தில் 24 பேர் உயிரிழந்து உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் அடுத்த 72 மணி நேரத்திலும் இதேபோல் தொடர்ந்து இடி, மின்னல் விழும் எனக் குறிப்பிட்ட இரு மாநிலங்களைச் சேர்ந்த வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.  இதனால் அடுத்த 72 மணி நேரத்திற்கு இரு மாநிலங்களிலும் ரெட் அலெர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பீகார், உத்தரப் பிரதேச அரசுகள் “யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்” எனக் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
பீகாரில் 23 மாவட்டங்களில் இடி, மின்னல் விபத்து காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் அதிகபட்சமாக கோபால்கங் மாவட்டத்தில் 13 பேர் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 8 மாவட்டங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக டீயோரியா மாவட்டத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 
இந்த விபத்து காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என இரு மாநில முதல்வர்களும் அறிவித்துள்ளனர்.