tamilnadu

img

வேளாண் சட்டங்கள் தொடர்பான என் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் : இல்லையேல் ஆட்சியிலிருந்து வெளியேறுங்கள்

வேளாண் சட்டங்கள் தொடர்பான என் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், இல்லையேல் ஆட்சியிலிருந்து வெளியேறுங்கள் என்று ஹர்யானா மாநிலத் துணை முதல்வரும், விவசாயிகள் கட்சி என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஜேஜேபி எனப்படும் ஜனநாயக ஜனதாக் கட்சியின் தலைவருமான துஷ்யந்த் சௌதாலாவிற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தேசிய செயற்குழு உறுப்பினரும், ஸ்வராஜ் இந்தியா தேசியத் தலைவருமாகிய யோகேந்திர யாதவ் கோரிக்கை வைத்துள்ளார்.

சண்டிகாரில் 17 விவசாய சங்கங்களின் சார்பில் விவசாயிகளின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த துஷ்யந்த் சௌதாலாவின் வீட்டை முற்றுகையிடத் தீர்மானித்துள்ளனர். சிர்ஷாவில் உள்ள அவர் வீட்டை அக்டோபர் 6 அன்று இவ்வாறு முற்றுகையிடத் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு யோகேந்திர யாதவ் பேசியதாவது:

வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு விரோதமானவை என்பதன் காரணமாக பஞ்சாப் சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ராத் கவுர் மத்திய அமைச்சரவைப் பதவியைத் துறந்துள்ளார்.  இதன்மூலம் பஞ்சாப் விவசாயிகள் இக்கிரிக்கெட் போராட்டத்தில் முதல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். அடுத்த விக்கெட்டை ஹர்யானா விவசாயிகள் வீழ்த்திட வேண்டும்.

விவசாயிகளின் கட்சி என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் துஷ்யந்த் சௌதாலாவோ அல்லது அவர் கட்சியோ வேளாண் அவசரச் சட்டங்கள் கொண்டுவந்தபின், இந்த வேளாண் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று எங்காவது பேசியிருக்கிறார்களா, இதுதொடர்பாக அவர்கள் பாஜக-வுடன் எப்போதாவது கலந்து பேசியிருக்கிறார்களா?

வேளாண் சட்டங்களுக்கும், சமூக முடக்கம் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுக்கும் என்ன சம்பந்தம்?  சம்பந்தம் இல்லையெனில், பின் ஏன் இவ்வளவு அவசரக் கோலத்தில் இந்தச் சட்டங்கள் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டன?

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குறித்து ஜேஜேபி-யின் கோரிக்கை என்ன? குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதம் செய்திட ஏன் சட்டம் இயற்றவில்லை? மாநிலங்களவையில் இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட லட்சணத்தை சௌதாலா ஏற்றுக்கொள்கிறாரா? பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தைக்கு வழிவகுத்திடும் விதத்தில் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மூலம் எந்தவிதத்தில் விவசாயிகள் நன்மை அடைகிறார்கள்? மாறாக விவசாயிகளையும், நுகர்வோரையும் பன்னாட்டு வேளாண் கம்பெனிகள் சூறையாடுவதற்கு துஷ்யந்த் சௌதாலாவின் கட்சி அனுதிக்கிறதா?

ஹர்யானாவில் இயங்கும் அனைத்து விவசாய அமைப்புகளும் இச்சட்டங்களுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியிருக்கும் நிலையில், விவசாய சங்கத்தின் தலைவர் தேவிலால் சௌதாலா வம்சாவளியைச் சேர்ந்த துஷ்யந்த் சௌதாலா மட்டும்  விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டுவந்துள்ள இச்சட்டங்களை ஏன் ஆதரிக்க வேண்டும்?

இவற்றுக்கு துஷ்யந்த் சௌதாலா பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்ல முடியவில்லை என்றால் ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும்.

இவ்வாறு யோகேந்திர சௌதாலா கூறினார்.