tamilnadu

img

பல்வீந்தர் சிங் படுகொலைக்கு அகில இந்திய விவசாய சங்கம் கண்டனம்

பஞ்சாப் மாநிலத்தில் சௌர்யா சக்ரா விருது பெற்ற தோழர் பல்வீந்தர் சிங் படுகொலை செய்யப்பட்டதற்கு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இப்படுகொலை தொடர்பாக பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நீதித்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியிருக்கிறது.

இது தொடர்பாக அகில இந்திய சங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பஞ்சாப் மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்துடன் தன்னை நெருக்கமாகப் பிணைத்துக் கொண்டிருந்தவரும், பிகிவிந்தைச் சேர்ந்தவருமான தோழர் பல்வீந்தர் சிங் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. தோழர் பல்வீந்தர் சிங்  சௌர்யா சக்ரா விருது பெற்றவர். இவர், 2020 அக்டோபர் 16 அன்று பிகிவிந்தில் தன்னுடைய இல்லத்தில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தோழர் பல்வீந்தர் சிங், பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பயங்கரவாதம் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் அதற்கெதிராக உறுதியான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தவர். காலிஸ்தான் இயக்கத்தினரால் 42க்கும்  மேற்பட்ட தடவை கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றில் தப்பித்ததுடன் அவர்களைப் புறமுதுகிட்டு ஓடவைத்தவர். அந்த சமயத்தில் அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் இருந்தார். மாநிலத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் நடவடிக்கைகளில் தன்னைத் தீவிரமாகப் பிணைத்துக்கொண்டிருந்தார்.       

தீவிரவாதத்திற்கு எதிரான இவருடைய போராட்டத்திற்காக, மத்திய அரசு இவருக்கும் இவருடன் இவரது துணைவியார் ஜகதீஷ் கவுர், சகோதரர் ரஞ்சித் சிங், சகோதரரின் துணைவியார் பால்ராஜ் கவுர் ஆகியோருக்கும் சௌர்யா சக்ரா விருதுகள்  வழங்கி கவுரவித்திருக்கிறது. இவ்வாறு சௌர்யா சக்ரா விருதுகள்  பெற்ற ராணுவம் அல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நான்கு பேர் மட்டுமேயாகும்.

அவர் குடும்பத்தினர் மீது அச்சுறுத்தல்கள் தொடர்ந்து இருந்து வந்தன. எனினும் அதனைக் கவனத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்காதது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் குடும்பத்தினருக்கு அளித்துவந்த பாதுகாப்பு வளையத்தை அரசு சென்ற ஆண்டு, திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டது. இக்குடும்பத்தினருக்கு பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இது தொடர்பாக பஞ்சாப் மாநிலத்தின் காவல்துறைத் தலைவரையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. எனினும் அவை அனைத்தையும் அவர் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோருகிறது.   

பல்வீந்தர் சிங் கொலையில் ஈடுபட்ட உண்மையான கயவர்களையும், சதிகாரர்களையும் கண்டுபிடித்திட பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையின்கீழ் நீதித்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோருகிறது. பஞ்சாப்பில் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடிய அனைத்துக் குடிமக்களுக்கும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திட மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றும் கோருகிறது.

தோழர் பல்வீந்தர் சிங்கிற்கு ஒரு தியாகிக்கு உரிய அனைத்து மரியாதைகளையும் அளித்திட வேண்டும் என்றும், அவர் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திட வேண்டும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோருகிறது.

தோழர் பல்வீந்தர் சிங் தியாகத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அவருடைய துணைவியாருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

(ந.நி.)