பாரிஸ் கம்யூன் எழுச்சி நாள்
உலகில் முதலாவது கம்யூனிசப் புரட்சியின் தாயகம் பிரான்ஸ். 1871ஆம் ஆண்டு, மார்ச் மாதம் தோன்றிய பாரிஸ் கம்யூன், மே மாதம் பிரெஞ்சு இராணுவத்தினால் கொடூரமாக அழித்தொழிக்கப் பட்டது. மூன்று மாதங்களுக்குக் குறைவான காலமே தாக்குப் பிடித்தாலும், உலக வரலாற்றில் குறிப்பிடத் தக்க தாக்கத்தை உண்டாக்கியது. உலகில் உழைக்கும் வர்க்க மக்களின் பொதுவுடைமைப் புரட்சி சாத்தியமே என்பதை நிரூபித்தது. பாரிஸ் உழைக்கும் வர்க்கத்தினரின் புரட்சியை, பல்வேறுபட்ட புரட்சிகர சக்திகள் வழிநடத்தின. அனார்க்கிஸ்ட்கள், மார்க்சிஸ்டுகள், லிபரல்கள் போன்ற பல்வேறு வகையிலான சித்தாந்தங்களைப் பின்பற்றினாலும், பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தனர்.
26 மார்ச்சில், உழைக்கும் வர்க்கப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒரு கம்யூன் (பொதுவுடைமை) அரசாங்கம் உருவாக்கப் பட்டது. 28 மார்ச்சில் “பாரிஸ் கம்யூன்” பிரகடனம் செய்யப் பட்டது. மக்கள் பிரதிநிதிகள் நேரடி ஜனநாயகத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப் பட்டனர். உலக வரலாற்றில் முதல் தடவையாக, அடிமட்டத் தொழிலாளர்களும், அரசாங்கத்தில் அங்கம் வகித்தனர். ஒரு புதிய சமத்துவ சமுதாயம் உருவானது. உழைக்கும் மக்கள் அனைவருக்கும் சமமான ஊதியம் வழங்கப்பட்டது. முந்திய சமூகத்தில், அமைச்சர், மருத்துவர், என்று உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களும், ஆலைத் தொழிலாளிக்குச் சமமான சம்பளம் பெற்றனர். உயர்ந்த பட்ச சம்பளம், ஆறாயிரம் பிராங்குகள் என்று தீர்மானிக்கப் பட்டது. அந்தக் காலத்தில், பிரான்சுக்கும், ஜெர்மனிக்கும் இடையில் நடந்த யுத்தத்தின் விளைவாகத்தான் பாரிஸ் கம்யூன் புரட்சி வெடித்தது. அன்று பிரஷ்யப் பேரரசு என்று அழைக்கப்பட்ட ஜெர்மனியப் படைகள், பாரிஸ் மாநகருக்கு வடக்கே இருந்த பிரதேசங்களைக் கைப்பற்றியிருந்தன. பிரெஞ்சு இராணுவம் பாரிசின் தெற்குப் பகுதியில் நிலை கொண்டிருந்தது. பிரெஞ்சு அரசாங்கம், வெர்சேய் நகரினைத் தற்காலிகத் தலைநகராக்கி, அங்கிருந்து இயங்கிக் கொண்டிருந்தது. பிரான்சு, ஜெர்மனிக்கு இடையிலான போர் நிறுத்தத்தின் பின்னர், பாரிஸ் நகரைச் சேர்ந்த, படையினரின் ஆயுதங்களைக் களைய முயற்சித்த காரணத்தினால் தான் புரட்சி வெடித்தது.
உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் இருப்பதைப் போல, பாரிஸ் நகரிலும், பெரும்பாலும் பாட்டாளி வர்க்க இளைஞர்கள் தான், இராணுவத்தில் சேர்ந்து இருந்தனர். பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஆயுதங்களை விட்டு வைப்பது, தனக்கு ஆபத்தானது என்று பிரெஞ்சு முதலாளித்துவ அரசு நினைத்தது. அவர்கள் பயந்தது மாதிரியே நடந்தது. பிரெஞ்சு முதலாளி வர்க்கத்தினால் தேசியவாத வெறியூட்டப் பட்டிருந்த இராணுவமாக இருந்தாலும், பாரிஸ் நகரைச் சேர்ந்த வீரர்கள் வர்க்க விழிப்புணர்வு கொண்டவர்களாக இருந்தனர். அதனால் தான், பாரிஸ் புரட்சி வெற்றி பெற்றது. பாரிஸ் கம்யூன் உருவானதும், தொழில் முறை இராணுவம் கலைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, ஒரு மக்கள்படை உருவானது. வயது வந்த அனைத்துக் குடிமக்களின் கைகளிலும் ஆயுதங்கள் வழங்கப்பட்டன.
பாரிஸ் கம்யூன், மதத்தையும், அரசையும் பிரித்தது. மதத்திற்கு வழங்கப்பட்ட உயர்ந்த அந்தஸ்து இரத்து செய்யப்பட்டது. மத நிறுவனங்களின் சொத்துக்கள் மக்கள் மயமாக்கப்பட்டன. கல்விக் கூடங்கள், அலுவலகங்களில் மாட்டப் பட்டிருந்த சாமிப் படங்கள் அகற்றப் பட்டன. பாடசாலைகள், பணியிடங்களில் பிரார்த்தனை செய்யும் வழமை அகற்றப்பட்டது. அவற்றைவிட, முந்தைய அரசாங்கம் வைத்திருந்த, பிரெஞ்சு பேரினவாதத்தைப் பறை சாற்றும் சின்னங்கள் அகற்றப்பட்டன. பேரினவாதம், தேசியவாதம், இனவாதம் எதற்குமே அங்கே இடம் இருக்கவில்லை. பாரிஸ் கம்யூன் என்பது தேசிய அரசு அல்ல. அது ஒரு உலக மக்களின் அரசாங்கம். அதிலே சில வெளிநாட்டவர்களும் அங்கம் வகித்தனர். உலகில் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், உழைக்கும் மக்கள் என்ற பொதுத் தன்மை அவர்களை ஒன்றிணைத்தது.
அன்றைய போரில் வெற்றி, தோல்வி காண முடியாமல், போர் நிறுத்தம் செய்து கொண்ட ஜெர்மனியும், பிரான்சும், பாரிஸ் கம்யூன் புரட்சியின் பின்னர் ஒன்று சேர்ந்தன. அப்போது ஜெர்மன்-பிரெஞ்சு ஆளும் வர்க்கங்களின் வர்க்க உணர்வு விழித்துக் கொண்டது. உலகில் தோன்றிய முதலாவது பாட்டாளி வர்க்கப் புரட்சியை நசுக்குவதற்காகக் கைகோர்த்துக் கொண்டனர். ஜெர்மன் உதவியுடன் படை நகர்வுகளை மேற்கொண்ட பிரெஞ்சு இராணுவம், மே மாதம் பாரிஸ் கம்யூனின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளைக் கைப்பற்றியது. பிரெஞ்சு இராணுவ நடவடிக்கை காரணமாக தப்பிச் செல்ல முயற்சிக்கும் புரட்சியாளர்களை, ஜெர்மனி தடுத்து நிறுத்தியது. அவர்களைத் தப்ப விடவேண்டாம் என்று வடக்கே நிலை கொண்டிருந்த ஜெர்மன் படைகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதனால், பாரிஸ் கம்யூனில் இருந்த யாரும் தப்பியோட முடியாதவாறு, நாலாபக்கமும் சுற்றி வளைக்கப் பட்டனர். அடுத்து அங்கே ஒரு இனப் படுகொலை அரங்கேறியது. பெண்கள், குழந்தைகள் என்று பேதம் பாராது, அனைவரும் தெருத் தெருவாக, வீடு வீடாக சுட்டுக் கொல்லப்பட்டனர். அன்றைய இனப் படுகொலையில், சுமார் முப்பதாயிரம் நிராயுதபாணிகளான பொது மக்கள், பிரெஞ்சு இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இன்று பாரிஸ் கம்யூனை நினைவுகூரும் இடங்கள் யாவும் அழிக்கப்பட்டு விட்டன. தற்போது எஞ்சியிருப்பது, பாரிஸ் நகரில் உள்ள கம்பட்டா சுடலையில் உள்ள, மதில் சுவர் ஒன்று மட்டுமே. அந்த மதில் சுவருக்கு முன்னால் வைத்து, இறுதியாக பல நூறு புரட்சியாளர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். அந்த இடத்தில், “பாரிஸ் கம்யூனில் இறந்தவர்களின் நினைவாக” என்று எழுதப்பட்டுள்ளது. பாரிஸ் கம்யூனின் நடைமுறைத் தவறுகளை விமர்சித்து, கார்ல் மார்க்ஸ் “பிரான்சின் உள்நாட்டுப் போர்” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதினார். அந்த நூலில் இருந்து பெறப்பட்ட படிப்பினைகளின் அடிப்படையில் தான், லெனின் ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சியை வழிநடத்தினார். சீனப் புரட்சிக்கும், பாரிஸ் கம்யூன் ஒரு உந்து சக்தியாக இருந்துள்ளது.
பெரணமல்லூர் சேகரன்