கிராமப்புற விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடங்கிப் போய் உள்ளது. விவசாயமும் இல்லை... 100 நாள் வேலையும் இல்லை... எந்த வித சேமிப்பும் இல்லாமல் அன்றாட உணவுக்கே வசதி இல்லாமல் திண்டாடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு அறிவித்த 1000 ரூபாய் இலவச ரேசன் பொருட்கள் கிடைக்க இன்னும் பல நாட்கள் ஆகும். ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு மேல் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. தினமும் டோக்கன் 100 பேருக்கு மட்டுமே...
1000 ,1200 குடும்ப அட்டைகள் உள்ள ரேசன் கடைகளில் 1000 ரூபாயும், ரேசன்பொருட்களும் மக்களுக்கு கிடைக்க 10,12 நாட்கள் ஆகும் என்பது தான் நிதர்சனமான உண்மை.
அதுவரை விவசாய தொழிலாளர்களின் நிலை என்ன ஆகும். வெளியூர்களில் வேலை செய்பவர்கள் திரும்பி வீட்டிற்கு வந்ததால் குடும்ப எண்ணிக்கை கூடியுள்ளது. குழந்தைகள் பள்ளி செல்லாமல் வீட்டில் உள்ளதால் அவர்களின் தின்பண்டங்கள் மற்றும் உணவுத் தேவை அதிகரித்துள்ளது. மக்கள் நலனில் அக்கறையுள்ள தொண்டர் குழுக்களை பயன்படுத்தி வீடுகளுக்கே சென்று உணவு பொருட்கள் வழங்க வேண்டும்.
விவசாயத் துறை செயலாளர் விவசாய வேலைகளுக்கு கிராம நிர்வாக அலுவலர்களிடம் அனுமதி பெற்று, விவசாய தொழிலாளர்களை பக்கத்து கிராமங்களுக்கு வாகனங்களில் அழைத்து செல்லலாம் என உத்தரவு வழங்கி உள்ளனர்.
வாகனங்களில் சமூக விலகல் விதிகளை கடைபிடிக்க முடியாது. அதனால் 100 நாள் வேலைத் திட்டத்தை துவக்கி தினக் கூலியாக ரூபாய் 600 கிடைக்க அரசு உத்தரவிட வேண்டும்.
31.03.2020 நெல், உளுந்து போன்ற தானியங்களுக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள். 15 நாட்கள் கூடுதலாக நீட்டிப்பு செய்து, அரசே பயிர்காப்பீடு பிரிமியத் தொகையை கட்ட வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை.
டெல்டா மாவடங்களில் கோடை சாகுபடிக்குத் தேவையான யூரியா தட்டுப்பாடு உள்ளது. கிராமப்புற மளிகை கடைகளில் மளிகை பொருட்கள், காய்கறிகள் தட்டுப்பாடு துவங்கி விட்டது. விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளது.
விவசாயிகளிடம் 10, 15 ரூபாய்க்கு வாங்கும் கத்தரிக்காய், தக்காளி 60 ரூபாய்க்கு வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. அரசு கிராமப்புற மக்களை பாதுகாக்க, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி மக்கள் பிரச்சினைகளை விவாத்திட வேண்டும்.
*கே.பக்கிரிசாமி*
மாநில செயலாளர்
அ.இ.வி.தொ.சங்கம்