தரங்கம்பாடி நவ.25- நாகை மாவட்டம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் பாரம்பரிய உலக மரபுச் சின்னங்கள் பாதுகாப்பு வார விழா யாருக்குமே தெரியாமல் நடந்து முடிந்ததாக கூறப்படுகிறது. கி.பி 1600 முதல் 1634 வரை தரங்கம்பாடியை ஆட்சி செய்த டேனிஷ்காரர்கள்(டென்மார்க் நாட்டினர்) 1620 ல் கடற்கரைக்கு மேற்கே டேனிஷ் கலை நுணுக்கத்துடன் கோட்டையை கட்டி தங்களது அதிகார மையமாக பயன்படுத்தினர். 399 ஆண்டுகள் பழமையாகியும் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கும் இக்கோட்டையில் செயல்படும் அகழ்வைப்பகத்தில் 14 ,15,16 ஆம் நூற்றாண்டுகளில் டேனிஷ்காரர்கள், தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், 1200 ஆம் ஆண்டு கால சிலைகள், பீங்கான், மண், மரத்தாலான பல நூறு ஆண்டுகள் பழமையான பொருட்கள், டேனிஷ் அரசர்கள், ஆளுநர்களின் புகைப்படங்கள், டேனிஷ் கால பத்திரங்கள், போர்க் கருவிகள் ,16 ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள் என ஏராளமான வரலாற்றுச் சின்னங்களை பத்திரப்படுத்தி காட்சிக்கு வைத்துள்ளனர்.
மேலும் கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டக வைப்பறை, பீர், ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்த இக்கோட்டையை நவம்பர் -19 முதல் 25 வரை ஒவ்வொரு ஆண்டும் ஒரு வார காலத்திற்கு எந்த வித கட்டணமுமின்றி பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் பார்வையிடலாம். தொல்லியல்துறை அதிகாரிகள் காட்சிக்கு உள்ளவைகள் குறித்து உரிய விளக்கங்களையும் அளிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு விழாவுக்கான ஒரு அறிவிப்பையும் கோட்டை நிர்வாகம் தெரிவிக்காமல் விழாவை முடித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு அழைப்பு விடுத்து வார நாட்கள் முழுவதும் மாணவர்களை அழைத்து விழாக்களை நடத்துவதோடு, பல்வேறு போட்டிகளையும் ஒவ்வொரு ஆண்டும் நடத்துவது வழக்கமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு விழாவை நடத்தினரா? நடத்தியதாக கூறி முடித்துக் கொண்டனரா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த ஓராண்டு காலமாக கோட்டை முழுவதும் உரிய பராமரிப்பு இன்றி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கட்டணமின்றி நடத்த வேண்டிய வார விழாவும் மர்மமாகவே முடிந்துள்ளது. பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றை அனைவரும் அறிய வேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்ட விழாவை தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் டேனிஷ் கோட்டை நிர்வாகம் ஏன் கொண்டாடவில்லை? என கேள்வி எழுப்பியுள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்ட செயலாளர் கே.பி.மார்க்ஸ் இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.