tamilnadu

img

மக்கள் மனதில் நம்பிக்கையை விதைப்பதே உடனடித் தேவை...! - பா.ஹேமாவதி கொளத்தூர் பகுதிச் செயலாளர், சிபிஐ(எம்)

உயிர்காக்கும்  பணியில் செங்கொடி இயக்கம்

சென்னையைப் பொறுத்தவரை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டிருக்கும் கொரோனாவால்  மக்கள் உயிருக்குப் பயந்து அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர். லேசான காய்ச்சல் வந்தாலும் கொரோனா தொற்று நோய் நம்மை தாக்கிவிடுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொள்வதும் அச்சத்தில் மாரடைப்பில் இறப்பதும். சிலர் வேலை இழப்பு காரணமாக கடும் அழுத்தத்திற்குள்ளாகி கடன்களை எப்படிக் கட்டி மீள்வது என்று தெரியாமல் இறந்து, ரத்தகொதிப்பு அதிகமாகி மூளை நரம்பு வெடித்து இறந்து வருவதாக ஓர் ஆய்வு கூறுகிறது. பலர், நமக்கு காய்ச்சல் என்று வெளியில் தெரிந்தால் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வீட்டை அடைத்துவிடுவார்கள்; மேலும், இறந்து போனால் உடலை குடும்பத்தாருக்கு தரமாட்டார்கள் என்றெல்லாம் அஞ்சி, உண்மையை மறைத்து, கடைசியில் நோய் முற்றி வீட்டிலேயே இறக்கின்றனர். அதுபோல இறந்தவர்களின் இறுதிச் சடங்கிற்கு சென்று வந்தவர்கள் பலருக்கு திருவிக நகர் பகுதியில் கொரோனா நோய் பரவியுள்ளது. இன்னும் சொல்லப்போனால், கொரோனா என கண்டறிந்து ஆம்புலன்ஸில் வந்து நோயாளியை புகைப்படம் எடுக்கிறேன் என்ற பெயரில் இம்சைப்படுத்தியதில் நோயாளி பதட்டமாகி மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். அவருக்கு, கொரோனா இருக்கிறது என்ற உண்மையை மறைத்து மாரடைப்பால் இறந்தார் என்று கூறி சடலத்தைப் பெற்ற நிகழ்வும் அயன்புரம் நம்மாழ்வார் பேட்டை பகுதியில் அரங்கேறியது.  

கொரோனா நோய் தொற்றுக்கு மருந்தில்லை என்ற காரணத்தால் பயந்து இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மக்களிடம் அச்சத்தைப் போக்கி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, மன உறுதியை அளித்து, நோய் பரவலை பாதிப்பை தைரியமாக எதிர்கொள்ளச் செய்வதே உடனடித் தேவையாக உள்ளது. ஆங்கில மருத்துவத்தில் மருந்து இல்லை என்ற காரணத்தினால் நம் வாழ்நாள் முடிந்துவிடும் என்று அச்சத்திலிருப்பவர்களை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள மாற்று மருத்துவம் எளிய கட்டணத்தில் கிடைக்கும் என்றால் அதனை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய கடமை, நம் கண் முன்பே காத்திருக்கிறது என்பதை, சென்னையில் காணும் அன்றாட நிகழ்வுகள் உணர்த்துகின்றன. பல நாட்களுக்கு முன்பு சென்னை கொளத்தூர் பகுதியில் இடதுசாரித் தோழர்களோடு இணைந்து நிவாரணப் பணியில் ஈடுபட்டு வந்த  சசிகலா என்பவரின் மகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சசிகலா, மாநகராட்சி தற்காலிக பணியாளராக காய்ச்சல் பரிசோதனை செய்யும் வேலை செய்து வந்தவர். இந்த வேலையைச் செய்ததால்தான் நம் மகனுக்கு கொரோனா வந்துவிட்டது என்று எண்ணி, அச்சத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக அருகில் உள்ளவர்கள் கூறினர். இந்த நிலையில் தொடர் இருமல், வாந்தியுடன் சசிகலாவின் மகன் மருத்துவமனையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார். ஏற்கனவே சசிகலாவை இழந்துவிட்டோம்; தற்போது அவர் மகனையும் இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க உறவினர்கள் ஏற்பாடுகள் செய்தனர். இந்நிலையில் தகவல் அறிந்து ஹோமியோபதி மருத்துவர்கள் அவரை அணுகி சிகிச்சை அளித்தனர்; குணமடையச் செய்தனர். ஹோமியோபதி மருந்தான ஆர்கனிசம் ஆல்பம் உள்ளிட்ட சில மருந்துகளால் நலமடைந்த இவர் போன்ற சிலருக்கும், மற்றவர்களுக்கும் அந்த மருந்தை கொண்டு செல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டுள்ளது . இந்தப் பின்னணியில், மக்களின் அச்சத்தைப் போக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் உறுதியுடன்  மருத்துவர்.கோப்பிகர் அறக்கட்டளையோடு இணைந்து ஹோமியோபதி மருத்துவ முகாம்களை வடசென்னையில் பல்வேறு இடங்களில் நடத்தி நல்ல பலன் கிடைத்துள்ளது.

மும்பை ஐஐடி ரசாயன பொறியியல் துறை சார்ந்த ஆராய்ச்சிக்குழு கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் நானோ துகள்கள் மூலம் மருந்து செலுத்தப்படும்போது ஹோமியோபதி மருந்துகள் சிறப்பாக வேலை செய்வதை கண்டறிந்துள்ளனர்.  ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தையான மருத்துவர் சாமுவேல் ஹானிமன் 1800களில் ஹோமியோபதி மருத்துவ முறையை உருவாக்கினார். 1800 காலக்கட்டங்களில் ஹோமியோபதியால் விளக்க முடியாத பல கேள்விகளுக்கு 20ஆம் நூற்றாண்டில் தடுப்பூசி மற்றும் நானோ துகள்கள் கோட்பாடுகளால் மட்டுமே விளக்க வேண்டும் என்பதால் இதற்கு எதிர்கால ஆராய்ச்சிகளின் மூலமே விடைகாண முடியும்.  உலகில் அலோபதி மருத்துவமுறைக்கு அடுத்தபடியாக உள்ளது ஹோமியோபதி மருத்துவமுறை. இந்த மருத்துவமுறை அலோபதி மருத்துவரால் உருவாக்கப்பட்டதால் ஆரம்பக் காலம் முதலே அலோபதியால் நிராகரிக்கப்பட்ட மருத்துவ முறையாக உள்ளது. உலகமயமாக்கப்பட்ட சூழலில் மருத்துவம் என்பது சேவை என்பதை தாண்டி வியாபாரமாக மாற்றப்பட்ட நிலையில் கார்ப்பரேட் மருத்துவ நிறுவனங்கள் ஏராளமான நிதி ஒதுக்கி ஆய்வுகள் மேற்கொள்கின்றன. இதுபோல பெரிய அளவில் நிதி ஒதுக்கும் வாய்ப்பு ஹோமியோபதி மருத்துவத்திற்கு குறைவே. இது சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளுக்கும் பொருந்தும்.

கொரோனா  பாதிப்பால் ஏராளமான மக்கள் உயிரிழந்து வரும் அபாயகரமான சூழலில் எந்த மருத்துவம் சிறந்தது என்ற விவாதத்தை முன் வைப்பதைவிட மக்களின் உயிர் காக்க எதிலெல்லாம் சிறந்த மருந்துகள் உள்ளனவோ அவை அனைத்தையும் பயன்படுத்தி, எளிய மக்களுக்கு எளிதாகக் கிடைக்கச் செய்யும் வகையில் ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் மக்கள். வடசென்னையில் சுமார் 25 மையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இதுவரை 12ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஹோமியோபதி - ஆர்சனிகம் ஆல்பம் மருந்து விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை பெற வரும் மக்கள் முற்றிலும் எளியவர்கள்; நடுத்தர வர்க்க மக்கள். அவர்களது முகங்களில் படர்ந்திருக்கும் அச்சத்தை போக்கும் முகாம்களாக இவை இருக்கின்றன. தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து சித்த மருந்துகள், ஹோமியோ மருந்து, அலோபதியில் உள்ள சத்து மாத்திரைகள் உள்ளிட்டவை அடங்கிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு மருந்துபெட்டகம் உடனடியாக அனைத்துக் குடும்பங்களுக்கும் இலவசமாக செல்ல வேண்டும். அப்படிக் கிடைக்கப் பெற்றால் மிகப்பெரிய நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்படுவதற்கு வழி வகுக்கும்.