tamilnadu

img

சாதிய ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக 45 நாட்களாகியும் வழக்கு பதியாத காவல்துறை

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், ஜூலை 29- தலித் பெண் உயிரிழந்து 45 நாட்களாகியும் காவல்துறை வழக்கு பதியாமல் உள்ளது. சாதி ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையை கண்டித்து செவ்வாயன்று (ஜூலை 28) திருத்தணி கமலா திரையரங்கம் அருகே தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாலங்காடு அருகில் உள்ள நல்லாட்டூரில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த மணிமேகலையை, தாழவேடு கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் ராஜ்குமாரை சந்திக்க அவரது வீட்டிற்கு மணிமேகலை சென்றுள்ளார். அங்கு மணிமேகலையை, ராஜ்குமாரின் உறவினர்கள் அடித்து அவமானப்படுத்தி உள்ளனர். இதற்கு திருத்தணி காவல்நிலைய உதவி ஆய்வாளரும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த மணிமேகலை தற்கொலை செய்து கொண்டார்.

மணிமேகலையின் தற்கொலைக்கு காரணமான ராஜ்குமார், அவரின் தாயார், சகோதரி, மாமா மற்றும் திருத்தணி காவல் உதவி ஆய்வாளர் சுதாகர் ஆகியோரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து திருத்தணி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சேகர், ஒருவாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜூலை 15 அன்று உறுதியளித்தார். அதன்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் இ.எழிலரசன், மாவட்டச்செயலாளர் த.கன்னியப்பன், சிபிஎம் வட்டச் செயலாளர் அப்சல் அகமது, மாவட்ட குழு உறுப்பினர் அந்தோனி, ரீசர், பொற்கொடி, திருத்தணி வட்டார வழக்கறிஞர்கள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் கௌதம், சுரேஷ், இளவரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி நீலவானத்து நிலவன், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி மைக்கேல் தாஸ், தலித் மக்கள் முன்னணி நிர்வாகி வாணிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.