தஞ்சாவூர் பரபரப்பாக உள்ளது. இங்கு கேட்கும் ஒலி குதிரையின் குளம்பு சப்தம் அல்ல. இளவரசிகளின் பெருமூச்சோ ராணிகளின் விசும்பலோ அல்ல. வரலாற்றுத்தேர் தன் தடத்தில் அழுந்த கால் பதித்து நடக்கும் ஒலிதான். இந்திய சுதந்திரத்திற்கு பிந்தைய மூன்றாவது குடமுழுக்குக்கு தஞ்சாவூர் பெரியகோயில் தயாராகிறது. இதற்கு முன் 1980, 1997களில் குடமுழுக்கு நடந்தது. பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு என நியதி உண்டு. பெரிய கோவிலைப் பொறுத்தவரை அந்த நியதி நடைமுறையில் இல்லை. முதல் குடமுழுக்கு கி.பி 1010ல் நடந்தது. கி.பி 1729, 1843 ஆண்டுகளில் நடந்த குடமுழுக்குக்கு கல்வெட்டு மற்றும் மோடி மொழியிலான ஆவண சாட்சியங்கள் உண்டு. கி.பி 1797ல் ஐரோப்பியர் ஒருவர் ஸ்ரீவிமானம் மேல் ஏறியதால் தூய்மை கெட்டதாக சம்ரோஷ்ணம் என்பது நடத்தப்பட்டுள்ளது.
இந்திய கோவில்களில் தலைசிறந்ததாக பெரியகோயிலை என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா போற்றுகிறது. கி.பி 1006ல் துவங்கப்பட்ட பெரியகோயிலின் கட்டுமானம் கி.பி 1010ல் முடிந்தது. பாரந்தூக்கிகள் இல்லாத அக்காலத்தில் 42000 டன் எடையுள்ள கருங்கல் விமானம் உயர்த்தப்பட்டது. கடைக்காலில் துவங்கி விமானத்து சிகரம் வரை கருங்கற்களால் இந்த கற்றளி உருவாக்கப்பட்டது. 240 அடி நீளமும் 120 அடி அகலமும் கொண்ட கோவிலின் நடுப்பகுதியில் 216 அடி உயரம் உள்ள பிருமாண்ட கோபுரம் அமைக்கப்பட்டது.
கல்வெட்டு ஆய்வாளர் ஹீல்ஷ்
மராத்திய மொழியில் எழுதப்பெற்ற தஞ்சைபுரி மான்மியமும் வடமொழியில் எழுதப்பட்ட பிரகதீஸ்வர மகாத்மியம் என்ற புராணமும் பெரியகோயிலை யார் கட்டியது என உதார் விட்டிருந்தனர். காடு வெட்டிச்சோழன் என்பவன் பெரியகோயிலை கட்டியதாக ஜி.யு. போப் குறிப்பிட்டார். காடு வெட்டி சோழனும் ஜீபூம்பா பூதமும் கோவிலைக்கட்டியதாக வதந்திகள் உலவிய போது இல்லவே இல்லை என சொன்னவர் எச். ராஜா அல்ல. இராஜராஜ சோழன்தான் இதைக் கட்டியதாக 1886ல் கூறியவர் ஹீல்ஷ் என்ற ஜெர்மானியர் ஆவார்.
ஹீல்சை கல்வெட்டு ஆய்வாளராக நியமித்தனர். அவர் தஞ்சை பெரியகோயில் கல்வெட்டுகள் பலவற்றை படியெடுத்து படித்தார். அக்கல்வெட்டுகள் அனைத்தும் தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 2ல் உள்ளன. 1892ல் வெங்கையா என்பவர் இதனை பதிப்பித்தார். கோவிலைக் கட்டியது சுற்றிலும் இருந்த 200 கிராமங்களை சேர்ந்த உழைப்பாளிகளே ஆவர். அவர்களுக்கு ஏட்டுக்கல்வி இல்லை. மாபெரும் கட்டுமான அறிவும், அர்ப்பணிப்பு உணர்வும் இருந்தது. கோயிலில் இறைவழிபாடு செய்ததும் தமிழர்களே. மாடுகள் கட்டப்பட்டிருந்த பெரியகோயிலின் உள்ளே மாடங்களில் பறவைகள் கூடு கட்டிய பெரியகோயிலின் உள்ளே ஆடம்பரமோ படாடோபமான விளக்கொளியோ இல்லை. சொல்லப்போனால் பெரியகோயில் என்பது வழிபாட்டு கோயில் மட்டுமல்ல. தொன்மை வரலாற்றின் அருங்காட்சியகமாகவும் இது அமைந்தது. 1000 ஆண்டுகால தமிழக ஆடல் கலை, ஓவியம், சிற்பம் இவற்றின் வரலாறு அங்கு உள்ளது. பெரிய கோயிலில் தினமும் ஆலயத்தில் பண்ணிசையோடு தேவாரத்தமிழ் பாட 48 பிடாரர்களையும் இரண்டு இசைக்கருவி வாசிப்பவர்களையும் மன்னர் நியமித்ததாக ஒரு கல்வெட்டு கூறுகிறது.
பெரிய கோயிலில் பேரெழில் பொழியும் பால்பௌர்ணமி ஒளி கண்டு பூரிப்படைந்தோரில் பாண்டியர், போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், மராட்டியர், மாலிக்காபூர் என பலர் உண்டு. ஆனால் அடிப்படையில் அப்போது இந்து சட்டம் என்ற ஒன்று இல்லவே இல்லை. பிராமணர்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்றது ஆரம்பகால பிராமணியம். கோயிலுக்குள் நுழைந்து தொண்டு செய்யும் பிராமணர் இழிகுலத்தார் என்றது மனு சாஸ்திரம். ஆலயத்துக்குள் நுழைந்து வணங்கும் பிராமணர்கள் அப்போதே சாதி நீக்கம் செய்யப்பட்டனர். மானவர்கள்(Manova) என்ற சாதிக்கு மட்டுமே இந்து சட்டம் எழுதியதாக மனு குறிப்பிட்டார்.
ஆகம விதிப்படி தீட்சதை பெறாவிட்டால் பிராமணர்கள் கூட கர்ப்பக் கிரகம் நுழையக் கூடாது என்றார் நீதிபதி சதாசிவ ஐயர். அர்ச்சகர்கள் என்போர் கோயில் உள்துறை ஊழியர்களே. எந்த சாதியினர் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழகத்தில் அமைக்கப்பட்ட நீதிபதி மகராஜன் குழு அறிக்கை பரிந்துரை செய்தது. எனினும் இந்தியாவில் அதை அமலாக்கியது கேரள இடதுசாரி அரசு மட்டுமே.
களவாடப்படும் வரலாறும் அழிக்கப்படும் அடையாளங்களும்
வரலாறு தொடர்ந்து பெரியகோயிலில் களவாடப்படுகிறது. 12 12ஆண்டுகளுக்கு முன் கோயிலை பராமரிக்கப்போவதாக தொல்லியல் துறையினர் பலகோடி ரூபாய் செலவு கணக்கு காட்டினர். எனினும் அங்கு பொறிக்கப்பட்டிருந்த இராஜராஜ சோழனின் நான்கு கல்வெட்டு தூண்கள் உடைக்கப்பட்டிருந்தன. தஞ்சை பெரியகோயில் தூய்மைப்பணி என ஆந்திர கம்பெனி ஓர் ஒப்பந்தம் செய்தது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியினர் முன்னொரு காலத்தில் கோயிலை சத்திரமாக்கி தங்கி இருந்தனர். இதற்கான அறிவிப்பு கோயிலில் இரு இடங்களில் இருந்தது. அங்கு தங்கி இருந்த ஆங்கில சிப்பாய் ஒருவர் சுற்று மண்டப தூண்களில் ஒன்றை துப்பாக்கியால் சுட்டிருந்தார். குண்டு பாய்ந்த துளையுடன் விரிசலும் தெரிந்தது. தூணை மாற்றுவதாக கூறி திருச்சுற்று மாளிகையில் வடபுறத்தில் ஒருபகுதியை பிரித்து மேய்ந்தனர். அடையாளங்கள் அழிக்கப்பட்டன. அங்கு புதிய தூண் அமைத்து புதிய கூரையும் கல்லால் அமைத்து கோடிக்கணக்கான ரூபாய் செலவு கணக்கு காட்டப்பட்டது.
1896ல் ஹீல்ஸ் படியெடுத்து வெளியிட்ட புத்தகம் மட்டுமே பல கல்வெட்டுகளுக்கு ஆதாரம். அத்தகைய உண்மைத் தூண்கள் இப்போது அங்கு இல்லை. காணாமல் போன கல்வெட்டுகள் ஏராளம். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியவர்கள் மருது சகோதரர்கள் ஆவர். அவர்களை கைது செய்ய ஆங்கில தளபதிக்கு மராட்டிய மன்னர்கள் தங்கள் தளபதியை அனுப்பி உதவினர். அந்த கல்வெட்டு செய்தி அங்கு உள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த வெட்டியான் தொழில் புரிந்த இருவர் தங்களுக்குள் சண்டையிட்டனர். இது குறித்து உண்மையை அறிவதாகக் கூறி கொதிக்கும் நெய்யில் இருவரையும் கையை விட சொன்ன தீர்ப்பு நாகரி எழுத்துகளில் கல்வெட்டில் உள்ளது. இவை பிந்தைய காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் ஆகும்.
பண்பாட்டு ஆபத்தின் விளிம்பில்
கடந்த 200 ஆண்டுகளில் மட்டும் பூமி சுமார் 10 நிலநடுக்கங்களால் குலுக்கப்பட்டுள்ளது. 1342ஆம் ஆண்டில் தென்னகத்தை ஒரு பூகம்பம் அச்சுறுத்தியது. கேரளாவில் கொச்சி அருகே விபின் தீவு என்ற நிலத் திட்டே உருவானது. தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு அப்போதெல்லாம் எந்த ஆபத்தும் இல்லை. இப்போதோ பெரியகோயில் பண்பாட்டு கலாச்சார ஆபத்தின் விளிம்பில் நிற்கிறது. பெரியகோயிலில் நடக்கும் பூசைகள் மேல்ஏகாதச ருத்ர ஜபம், ஸ்ரீ ருத்ராபிஷேகபூர்ய பிரசன்னாபிஷேகம், சூர்யஅக்கினி ஸங்கிரஹரணம், கும்பலங்காரம், தேவதா கலா கர்ஷணம், இஷ்ட தானம், தசதானம், பஞ்ச தானம், யாத்ரா தானம், யாதரா ஹோமம், யாக சானா பிரஷேகம், யாக பூஜை, ஹோமம், யாக்சனம், பிரமோசம், பூர்ணஹர்தி, தீபாராதனை, கோபூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை என்று அழைக்கப்படுகின்றன. சொற்களின் பூகம்பத்தால் பெரியகோயிலில் தள்ளாடுகிறது.
இது தஞ்சையின் மொழி அல்ல. உழைப்பாளிகள் தங்கள் குலதெய்வத்தை மாரியம்மனை, காளி அம்மனை, பிடாரி கோயிலை வழிபடும் மொழியால்தான் பெரியகோயிலிலும் வழிபாடு நடத்தினர். வழிபாட்டு மொழியில் தமிழ் வெல்வது மட்டும் அல்ல, வழிபாட்டு முறைகளில் கூட அன்னியம் தகர்க்கப்பட வேண்டும். “புதிய இந்திய விவசாயிகளின் குடிசைகளிலிருந்தும் அவர்கள் சுமந்த ஏர்க்கலப்பைகளிலிருந்தும் மீனவர்களின் குப்பங்களிலிருந்தும் செருப்பு தைப்பவர்கள், தெரு கூட்டுபவர்களின் தாழ்ந்த குடிசைகளிலிருந்தும் எழட்டும். இந்த எளிய மக்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்டு வாழ்கின்றனர்.... முடிவற்ற வேதனை அவர்களுக்கு அளவற்ற ஆற்றலைத் தருகிறது..... புதிய விடியல் கீழ்வானில் செந்நிறம் பரப்பி படர்கிறது. புது யுகம் பிறக்கிறது. ” என்று விவேகானந்தர் ஒருமுறை கூறினார். தஞ்சையின் வீதி அமைப்பு கூட சாதி ரீதியாகவே அமைந்து இருந்தது. இப்போதுதான் மாறி வருகிறது. வரலாற்று தேர் உருண்டு கொண்டே இருக்கும். அன்னியம் அகற்றப்பட்டு பெரியகோயிலும் தஞ்சை உழைப்பாளி மக்களால் சுவீகரிக்கப்படும்.