tamilnadu

img

தொடர்ந்து மூடப்படும் பட்டாசு ஆலைகள்

ஒரு புறம் அனுமதி; மறுபுறம் கடும் விதிமுறைகள் அமல்

தொழிலாளர்கள் அவதி

விருதுநகர், ஏப்.21- 50 சதவீத தொழிலாளர்களுடன் பட்டாசு ஆலைகளை இயக்கிட விருது நகர் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இருந்த போதும், கடுமையான விதிமுறைகள் மற்றும் பேருந்துகள் இயங்காத காரணத்தால், பட்டாசு ஆலைகள் திங்கள் கிழமை இயங்கவில்லை. விருதுநகர் மாவட்டம், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இப்பணியி ல், நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பட்டாசு ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், அதில் பணிபுரிந்து வந்த 5 லட்சம் தொழிலாளர்களும் வேலையின்றி தவித்து வந்தனர்.

இந்தநிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பட்டாசு ஆலைகள் அனைத்தும் 50 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும், ஆலை முழுவதும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். ஆலைக்குள் 6 அடி இடைவெளியில் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும். தொழிலாளர்களை அழைத்து வரும் வாகனங்களிலும் சமூக இடைவெளி இருத்தல் வேண்டும் எனவும் கூறப்ப ட்டது. மேலும் இதை ஆய்வு செய்திட அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவி க்கப்பட்டது. இந்நிலையில், திங்களன்று பெரும்பாலான ஆலைகள் திறக்க ப்படும், தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்கு செல்வார்கள் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கு மாறாக, ஏராளமான ஆலைகள் இயங்கவில்லை.

மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்

இதுகுறித்து ஆலை நிர்வாகத்தினர் கூறுகையில், பட்டாசு ஆலைகளை 50 சதவீத தொழிலாளர்களை ஷிப்ட் முறையில் வேலை செய்ய வைப்பது கடினம். மேலும் வாகனங்களில் சமூக இடைவெளி, ஆலைகளில் சமூக இடைவெளி என்பதை கடைப்பிடிக்கலாம். ஆனால், பட்டாசு தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது.  எனவே,  போதுமான ஆர்டர்கள் வந்த போதிலும், மூலப் பொருட்கள் பற்றாக்குறையால் ஆலை யை இயக்குவதில் சிக்கல் உள்ளது  என தெரிவித்தனர்.

அதேநேரத்தில், பெரிய பட்டாசு ஆலை நிர்வாகம், தங்களது தொழி லாளர்களை  சொந்த வாகனங்களில்  அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால், சிறிய மற்றும் நடுத்தரமான பட்டாசு ஆலைகளுக்கு தொழிலாளர்கள் பெரும்பாலும், அரசுப் பேருந்துகளிலும்,   பேருந்து வசதியற்ற கிராமங்களில் உள்ள தொழிலாளர்கள் தனியார் வாகனங்களின் மூலமுமே பட்டாசு ஆலைப் பணிக்கு சென்று வந்தனர். தடை உத்தரவால் தனியார் வாகனங்கள்  மற்றும் அரசுப் பேருந்துகள் இயங்காத காரணத்தாலும் ஏராளமான பட்டாசு ஆலைகள் முறையாக இயக்கப்படவில்லை. இதனால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பது தொடர்கிறது.

இதனால், மாவட்ட நிர்வாகம் ஆலையை இயக்கிட  அனுமதி வழங்கினாலும் , வாகனங்களை  இயக்குவதற்கு உள்ள தடையை முழுமையாக நீக்கும் பட்சத்திலேயே அனைத்துப் பட்டாசு ஆலைகளும் இயங்கிட வாய்ப்புள்ளது.     (ந.நி)