tamilnadu

img

மகாத்மா காந்தி - நோபல் விருதைப் பெற முடியாமல் போன வெற்றியாளர்

 20ஆம் நூற்றாண்டு அகிம்சையின் வலுவான அடையாளமாக மோகன்தாஸ் காந்தி (1869-1948) மாறியிருக்கிறார். அமைதிக்கான நோபல் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதராக இந்த இந்திய தேசியத் தலைவர் இருந்திருக்க வேண்டும் என்று இப்போது பின்னோக்கிப் பார்த்து கூறப்படுகிறது. நோபல் விருதிற்காக அவரது பெயர் பல முறை பரிந்துரைக்கப்பட்ட போதிலும், ஒருபோதும் அவருக்கு அந்த விருது வழங்கப்படவேயில்லை. அது ஏன்? நார்வே நோபல் குழுவின் பார்வை மிகவும் குறுகியதாக இருந்ததா?
ஐரோப்பியர்கள் அல்லாத மக்களிடையே நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தை குழு உறுப்பினர்களால் பாராட்ட முடியவில்லையா? அல்லது தங்கள் சொந்த நாட்டிற்கும், கிரேட் பிரிட்டனுக்கும் இடையிலான உறவுக்கு தீங்கு விளைவிக்க கூடியதொரு விருதை வழங்குவதற்கு அந்த நார்வே குழு உறுப்பினர்கள் பயந்தார்களா? என்று இந்த கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுபவையாக இருக்கின்றன.
1937, 1938, 1939, 1947ஆம் ஆண்டுகளிலும், இறுதியாக 1948 ஜனவரியில் அவர் படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவும் காந்தியின் பெயர் நோபல் விருதிற்காகப் பரிந்துரை செய்யப்பட்டது.. 1989ஆம் ஆண்டில் தலாய்லாமாவுக்கு அமைதிக்கான நோபல் விருது வழங்கப்பட்டபோது, நோபல் குழு உறுப்பினர்கள் இந்த புறக்கணிப்பு குறித்து பகிரங்கமாக தங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்தனர். அப்போது குழுவின் தலைவர், “இது ஒருவகையில் மகாத்மா காந்தியின் நினைவாகவே வழங்கபப்டுகிறது” என்று கூறினார். எவ்வாறாயினும், காந்திக்கு ஏன் விருது வழங்கப்படவில்லை என்ற ஊகங்கள் குறித்து ஒருபோதும் நோபல் குழுவினர் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்ததில்லை, இந்த சர்ச்சையின் மீது சிறிதளவாவது வெளிச்சம் போட்டுக் காட்டடக்கூடிய ஆதாரங்கள் எதுவும் சமீபகாலம் வரையிலும் கிட்டவில்லை.

மகாத்மா காந்தி - யார் அவர்?

மகாத்மா அல்லது "மிகப்பெரிய ஆத்மா" என்று அழைக்கப்படுகிற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, இன்று மேற்கு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் இருந்த சிறிய ஆட்சிப்பகுதி ஒன்றின் தலைநகரமாக இருந்த போர்பந்தரில் பிறந்தார். அவரது தந்தை அங்கே முதல் அமைச்சராக இருந்தார். அவரது தாயார் மிகவும் ஆழ்ந்த ஹிந்து மதப்பற்றாளராக இருந்தார். அவரும், காந்தி குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் அகிம்சை, மதக் குழுக்களிடையே சகிப்புத்தன்மை ஆகியவற்றை மிக முக்கியமானதாகக் கருதுகின்ற ஹிந்து மதத்தின் ஒரு பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். இந்திய சமூகத்தில் மோகன்தாஸ் காந்திக்கு கிடைத்த இடத்தை எவ்வாறு அவரால்  அடைய முடிந்தது என்பதற்கான மிகமுக்கியமான விளக்கமாக அவரது குடும்பப் பின்னணி காணப்படுகிறது. 1880களின் இரண்டாம் பாதியில், மோகன்தாஸ் லண்டனுக்குச் சென்று அங்கே சட்டம் பயின்றார். தனது படிப்பை முடித்த பின்னர், அவர் முதலில் இந்தியாவுக்குச் சென்று அங்கே பாரிஸ்டராகப் பணியாற்றினார், பின்னர் 1893இல் தென்னாப்பிரிக்காவில் உள்ள நடாலுக்குச் சென்ற அவர் அங்கே இந்திய வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார்.

இந்திய சிறுபான்மையினரின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துகின்ற வகையிலே தென்னாப்பிரிக்காவில் காந்தி பணியாற்றினார். இனவெறிச் சட்டத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அவரின் இந்தப் பணி, அவரிடம் வலுவான இந்திய மற்றும் மத உறுதிப்பாட்டை வளர்த்துக் கொள்ளவும், சுய தியாகத்திற்கான உறுதியை ஏற்படுத்திக் கொள்ளவும் வழிவகுத்தது. அடிப்படை மனித உரிமைகளுக்காக நடைபெற்ற அந்த இந்தியப் போராட்டத்தில் அகிம்சை முறையை பெரும் வெற்றியுடன் அவர் அறிமுகப்படுத்தினார். அவர் கடைப்பிடித்த சத்தியாக்கிரகம் என்ற “உண்மையான ஆற்றல்” என்கிற அந்த வழிமுறை அதிக கருத்தியல் நுட்பம் வாய்ந்ததாக இருந்தது சட்டத்தின் ஆட்சியை நிராகரிக்காமல், நியாயமற்ற அல்லது அடக்கக்கூடிய சட்டங்களை இந்தியர்கள் மீற வேண்டும் என்பதை கொள்கையாக ஏற்றுக் கொண்டு, ஒவ்வொருவரும் சட்டத்தை மீறியதற்கான தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அமைதியாக, இன்னும் உறுதியுடன், கேள்விக்குரிய அந்த சட்டத்தின் சட்டப்பூர்வ நிலையை நிராகரிக்க வேண்டும். இவ்வாறான நடவடிக்கை எதிரிகளை - முதலில் தென்னாப்பிரிக்க அதிகாரிகளை, பின்னர் இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களை – அவர்களுடைய சட்டத்தின் சட்டவிரோதத்தை உணர வைத்தது.

1915இல் காந்தி மீண்டும் இந்தியாவுக்கு வந்தபோது, தென்னாப்பிரிக்காவில் அவர் செய்திருந்த சாதனைகள் குறித்த செய்திகள் அவரது சொந்த நாட்டிலும் ஏற்கனவே பரவியிருந்தன. சில ஆண்டுகளிலேயே, முதலாம் உலகப் போரின் போது, அவர் இந்திய தேசிய காங்கிரசில் முன்னணி நபராக ஆனார். போரின் இடைக்காலப்பகுதியில் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியான அகிம்சைப் பிரச்சாரங்களை அவர் தொடங்கினார். அதேநேரத்தில் இந்திய ஹிந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைப்பதற்கான வலுவான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார், ஹிந்து சமுதாயத்தில் இருந்த ‘தீண்டத்தகாதவர்களின்’ விடுதலைக்காகப் போராடினார். அவரது சக இந்திய தேசியவாதிகள் பலரும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அகிம்சை முறைகளை திட்டமிட்ட சில காரணங்களுக்காக பயன்படுத்த விரும்பினாலும், காந்தியின் அகிம்சை என்பது கொள்கை ரீதியானதாகும். அந்த விஷயத்தில் அவர் கொண்டிருந்த உறுதியினால், இந்திய தேசியவாதம் அல்லது மதம் குறித்த அணுகுமுறைக்கு அப்பாலும் மக்கள் அவரிடம் மதிப்பு கொள்ள வைத்தது. காந்தி ஒரு விதிவிலக்கான ஆளுமை என்றே, அவருக்கு சிறைத்தண்டனை விதித்த பிரிட்டிஷ் நீதிபதிகள் கூட அங்கீகரித்திருந்தனர்.

அமைதிக்கான நோபல் விருதிற்கான முதல் பரிந்துரை

1930களின் முற்பகுதியில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிறுவப்பட்டிருந்த, காந்திக்கு ஆதரவாக இருந்த “இந்திய நண்பர்கள்” சங்கங்களின் வலையமைப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் காந்தியை அதிகமாகப் பாராட்டியவர்களில் மிகமுக்கியமானவர்களாக இருந்தனர். இந்த இந்திய நண்பர்கள் வெவ்வேறு சிந்தனைகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருந்தனர். அவர்களில் மதம் சார்ந்திருந்தவர்கள் காந்தியிடம் இருந்த பக்தியைப் பாராட்டினர். ராணுவ எதிர்ப்பாளர்கள், அரசியல் தீவிர உணர்வாளர்கள் போன்ற மற்றவர்கள் அவரது அகிம்சை தத்துவத்தின் மீது அனுதாபம் கொண்டு ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பாளராக அவரை ஆதரித்தனர்.

1937ஆம் ஆண்டில் நார்வே ஸ்டோர்டிங் (பாராளுமன்றம்) உறுப்பினரான ஓலே கோல்ப்ஜார்ன்சன் (தொழிலாளர் கட்சி), அந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் விருதிற்கு காந்தியின் பெயரைப் பரிந்துரைத்தார், நார்வே நோபல் குழு தயாரித்த சுருக்கப்பட்டியலில் இருந்த பதின்மூன்று பேரில் ஒருவராக காந்தியும்  தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் காந்தியின் நியமனத்திற்கு செயலூக்கம் தருகின்ற கடிதத்தை கோல்ப்ஜார்ன்சன் எழுதவில்லை; "இந்திய நண்பர்கள்" அமைப்பின் நார்வே கிளையில் இருந்த முன்னணி பெண்களாலேயே எழுதப்பட்ட அந்தக் கடிதத்திலிருந்த சொற்கள் யாரும் எதிர்பார்க்கின்ற அளவிற்கு நேர்மறையாகவே இருந்தன.

குழுவின் ஆலோசகராக இருந்த பேராசிரியர் ஜேக்கப் வோர்ம்-முல்லர், காந்தி குறித்து மிகவும் விமர்சனப்பூர்வமான அறிக்கை ஒன்றை அப்போது எழுதினார். “சந்தேகத்திற்கு இடமின்றி, அவர் ஒரு நல்ல, உன்னதமான துறவி – இந்திய மக்களால் தகுதியுடையவராக, மரியாதைக்குரியவராக நேசிக்கப்படுகின்ற முக்கியமான மனிதர்.” என்று ஒருபுறம் ஒரு நபராக காந்தியைப் பற்றிய பொதுவான அபிமானத்தை முழுமையாக அவர் புரிந்து வைத்திருந்தார். ஆனால் மறுபுறத்தில், காந்தியை அரசியல் தலைவராகக் கருதிய போது, அந்த நார்வே பேராசிரியரின் விளக்கம் சற்று மட்டுப்படுத்துகின்ற வகையிலேயே இருந்தது. “அவருடைய கொள்கைகளில் அவரைப் பின்பற்றுபவர்களால் திருப்திகரமாக அவற்றை விளக்க முடியாத அளவிற்கு கூர்மையான திருப்பங்கள் உள்ளன, (…) அவர் ஒரு சுதந்திரப் போராளி மற்றும் சர்வாதிகாரி,  இலட்சியவாதி மற்றும் தேசியவாதி. பொதுவாக புனிதராக இருக்கின்ற அவர், எதிர்பாராத வகையில் சாதாரண அரசியல்வாதியாகவும் இருக்கின்றார்” என்று அவர் எழுதினார்,

சர்வதேச அமைதிக்கான இயக்கத்தில் காந்தியை விமர்சித்த பலரும் இருந்தனர். காந்தி ஒரு சமாதானவாதி அல்ல என்றும், பிரிட்டிஷார் மீதான தனது வன்முறையற்ற பிரச்சாரங்கள் வன்முறை மற்றும் பயங்கரவாதமாக மாறிவிடும் என்பதை காந்தி அறிந்திருக்க வேண்டும் என்றும் இந்த விமர்சகர்களைப் பின்பற்றிய நோபல் குழுவின் ஆலோசகர் குறிப்பிட்டிருந்தார். 1920-1921இல் முதலாவது ஒத்துழையாமை இயக்கப் பிரச்சாரத்தின் போது இதுதான் நடந்தது. ஐக்கிய மாகாணத்தில் இருந்த சவுரி சவுராவில் கூடியிருந்த கும்பல் காவல் நிலையம் ஒன்றைத் தாக்கியது. காவல்துறையினர் பலரைக் கொன்ற பின்னர் காவல் நிலையத்திற்கும் அந்தக் கும்பல் தீ வைத்தது..

காந்தி ஓர் இந்திய தேசியவாதி என்பதே இந்தியர்கள் அல்லாதவர்களிடமிருந்து அடிக்கடி வருகின்ற விமர்சனம் ஆகும். “தென்னாப்பிரிக்காவில் நன்கு அறியப்பட்டிரு்ந்த அவருடைய போராட்டம் இந்தியர்கள் சார்பானதாக மட்டுமே இருந்தது; நிலைமைகள் அதைவிட மோசமாக இருந்த கறுப்பர்கள் சார்ந்ததாக இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றே ஒருவர் கூறலாம்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்த பேராசிரியர் வோர்ம்-முல்லர், காந்தியின் கொள்கைகள் உலகளாவியதா அல்லது இந்தியத் தன்மை கொண்டதா என்பது குறித்த சந்தேகங்களை எழுப்பியிருந்தார்.

1937ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் விருது பெற்றவரின் பெயர் செல்வுட் பிரபு சிசில். அந்த ஆண்டு காந்திக்கு அமைதி விருது வழங்குவதை நார்வே நோபல் குழு தீவிரமாகப் பரிசீலித்ததா என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் அது சாத்தியமற்றதாகவே இருந்தது. ஓலே கோல்ப்ஜார்ன்சன் மீண்டும் 1938 மற்றும் 1939ஆம் ஆண்டுகளில் காந்தியின் பெயரைப் பரிந்துரைத்தார். ஆனால் குழுவின் சுருக்கப்பட்டியலில் காந்தியின் பெயர் மீண்டும் இடம் பெற பத்து ஆண்டுகள் கடந்து சென்று விட்டன.

1947: வெற்றியும் தோல்வியும்

இந்தியாவிலிருந்து  நார்வே வெளியுறவு அலுவலகத்தின் வழியாக தந்தி மூலம் 1947ஆம் ஆண்டில் காந்திக்கு விருது வழங்குவது குறித்த பரிந்துரைகள்  வந்தன. பம்பாயின் பிரதமராக இருந்த பி.ஜி.கெர், ஐக்கிய மாகாணங்களின் பிரதமராக இருந்த கோவிந்த் வல்லப் பந்த், இந்திய சட்டமன்றத்தின் தலைவராக இருந்த  மாவ்லங்கர் ஆகியோர் அவரது பெயரைப் பரிந்துரைத்திருந்தனர். “இந்த ஆண்டுக்கான நோபல் விருதிற்கு பரிந்துரைக்கிறேன். மகாத்மா காந்தி  இந்திய தேசத்தை கட்டியெழுப்பியவர். தார்மீக ஒழுங்கு நிறைந்த மிகச் சிறந்த வாழ்க்கையை வாழ்பவர். இன்று அமைதிக்கான உலகின் மிகச் சிறந்த வெற்றிவீரராக இருப்பவர்” என்று கோவிந்த் வல்லப் பந்த் எழுதியதைப் போல அவரது பெயரை முன்வைத்ததை ஆதரிக்கும் வகையில் இருந்த அவர்களின் வாதங்கள் தந்தி பாணியிலேயே எழுதப்பட்டிருந்தன. ஆறு பெயர்களுடன் இருந்த நோபல் குழுவின் சுருக்கப்பட்டியலில், மோகன்தாஸ் காந்தியும்  ஒருவராக இருந்தார்.

நோபல்  குழுவின் ஆலோசகரும், வரலாற்றாசிரியருமான ஜென்ஸ் அருப்  சீப் 1937 க்குப் பின்னர் இந்திய அரசியல் வரலாற்றில் காந்தியின் பங்கை முக்கியத்துவப்படுத்தி புதிய அறிக்கை ஒன்றை எழுதினார். “காந்தி மற்றும் அவரது இயக்கத்திற்கு ஒரே நேரத்தில் மிகப்பெரிய வெற்றியையும், மோசமான தோல்வியையும் தந்த இந்திய சுதந்திரம், இந்தியப் பிரிவினையை நோக்கியதாக 1937 முதல் 1947 வரையிலான அடுத்த பத்து ஆண்டுகள் இருந்தன” என்று சீப் எழுதினார். சுதந்திரத்திற்கு முந்தைய கடைசி பத்தாண்டுகளில் இந்தியர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையிலான போராட்டம்; இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் பங்கேற்பு, இறுதியாக, ஹிந்து மற்றும் முஸ்லீம் சமூகங்களுக்கு இடையிலான மோதல் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கையாள வேண்டியிருந்த மூன்று வெவ்வேறு, ஆனால்  ஒன்றுக்கொன்று தொடர்புடைய  மோதல்களின் போது, காந்தி எவ்வாறு  செயல்பட்டார் என்பதை அந்த அறிக்கை விவரித்தது. காந்தி  இந்த அனைத்து விஷயங்களிலும், தனது அகிம்சைக் கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றி  வந்தார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வோர்ம்-முல்லர் எழுதிய அறிக்கையைப் போன்று காந்தியைப் பற்றி  சீப் அறிக்கை விமர்சிக்கவில்லை. அது மிகவும் சாதகமாகவே இருந்தது என்றாலும் வெளிப்படையாக ஆதரவளிக்கவில்லை. இந்தியா மற்றும் புதிய முஸ்லீம் நாடான பாகிஸ்தானைப் பிரித்ததைப் பற்றியும் சீப் “1947 ஆகஸ்ட் 15 அன்று டைம்ஸ் பத்திரிகையில்  வெளியானவாறு இந்தியப்  பிரிவினை என்ற பிரம்மாண்டமான அறுவை சிகிச்சை, மிகப் பெரிய பரிமாணங்களில் ரத்தக்களரிக்கு வழிவகுக்கவில்லை. என்பதற்கு காந்தியின்  போதனைகள்,  அவரைப் பின்பற்றியவர்களின்  முயற்சிகள், அவரது  இருப்பு  ஆகியவற்றிற்கு கணிசமான பங்கு உண்டு என்றே பொதுவாக கருதப்படுகிறது” என்று சுருக்கமாக எழுதி முடித்திருந்தது, இன்றைக்கு இருக்கின்ற நிலையில் முதிர்ச்சியற்றதாகவே தோன்றுகிறது.  

அவரது அறிக்கையைப் படித்த பின்னர், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக்கட்டத்தைப் பற்றி புதிய தகவல்களைப் பெற்றதாக நார்வே  நோபல் குழுவின் உறுப்பினர்கள் உணர்ந்திருக்க வேண்டும். இருப்பினும், அந்த வகையிலான போராட்டத்திற்காக  அமைதிக்கான நோபல் விருது ஒருபோதும் வழங்கப்பட்டதில்லை. அகிம்சையின் அடையாளமாக காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா, 1947 இலையுதிர்காலத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் அமைதியற்று இருந்த நிலையில், மிக முக்கியமான இந்தியத் தலைவருக்கு அமைதிக்கான விருது வழங்கப்பட்டால்  அதன் மூலம் என்னவிதமான அரசியல் விளைவுகளை எதிர்பார்க்கலாம் என்பது போன்ற விஷயங்களையும் குழு உறுப்பினர்கள் பரிசீலிக்க வேண்டியிருந்தது:

1947 அக்டோபர் 30 அன்று உறுப்பினர்கள் தங்கள் முடிவை எடுக்கும்போது, குழுவிலிருந்த இரண்டு செயற்குழு உறுப்பினர்களான, கிறிஸ்தவ பழமைவாதியான ஹெர்மன் ஸ்மிட் இங்க்பிரெட்சன்,  தாராளவாத  கிறிஸ்தவரான ஆஃப்டெடல் ஆகியோர் காந்திக்கு ஆதரவாகப் பேசினர் என்பதை குழுவின் தலைவராக இருந்த குன்னர் ஜானின் நாட்குறிப்பில் இருந்து நாம்  இப்போது அறிகிறோம்.  அதற்கு ஓராண்டிற்கு முன்னதாக  அவர்கள்  ஒய்.எம்.சி.ஏ  தலைவராக இருந்த ஜான் மோட்டை தீவிரமாக  ஆதரித்தனர். பொதுவாக சமூக மற்றும் கருத்தியல் மோதல்களால் அச்சுறுத்தப்பட்ட  உலகில் தார்மீக மற்றும் மத அடையாளங்களுடன் பணியாற்றக் கூடியவர்களை அவர்கள் விரும்பியதாகவே தெரிகிறது. இருப்பினும், 1947இல் அவர்களால் மற்ற மூன்று உறுப்பினர்களையும் சமாதானப்படுத்த முடியவில்லை. தொழிலாளர் கட்சியைச் சார்ந்த அரசியல்வாதி மார்ட்டின் டிரான்மல் இந்திய-பாகிஸ்தான் மோதல்களுக்கு மத்தியில் காந்திக்கு விருது வழங்கப்படுவதில் மிகுந்த தயக்கம் காட்டினார். டிரான்மலுடன் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிர்கர் பிராட்லாண்ட்  உடன்பட்டவராக இருந்தார். போரில் ஈடுபாடு கொள்வதற்கு காந்தி  மிகவும் ஆதரவாக இருந்தார் என்று அவர்கள்  நினைத்தார்கள்.

கூடுதலாக, டிரான்மல், ஜான் ஆகிய இருவரும் ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்றதொரு பிரார்த்தனைக் கூட்டத்தில், காந்தி வெளியிட்ட அறிக்கையானது அவர் தொடர்ந்து போரை நிராகரிப்பதை கைவிட்டு விட்டதைக் குறிப்பதாக இருந்ததாக அறிந்தனர். ’பாகிஸ்தானுடனான ‘போரில்’ திரு.காந்தி’ என்ற தலைப்பில் வெளியான 1947 செப்டம்பர் 27 அன்று ராய்ட்டர்ஸ்  டைம்ஸ் பத்திரிகையின்  தந்தியில், "இன்றிரவு திரு.காந்தி தனது பிரார்த்தனைக் கூட்டத்தில் கூறினார்: தான் எப்போதுமே எல்லா யுத்தங்களையும் எதிர்த்து வந்திருந்தாலும், பாகிஸ்தானிடமிருந்து நீதியைப் பெறுவதற்கு வேறு வழியில்லை என்றால், பாகிஸ்தான் தொடர்ந்து தனது நிரூபிக்கப்பட்ட பிழைகளைக் கண்டு, அவற்றைக் குறைப்பதற்கு மறுப்பதைத் தொடர்ந்தால், இந்திய ஒன்றிய அரசு அதற்கு எதிராகப் போருக்குச் செல்ல வேண்டும். போரை யாரும் விரும்பவில்லை என்றாலும் ஒருபோதும் அநீதியைத் தாங்கிக் கொள்ளுமாறு யாரையும் அறிவுறுத்த முடியாது. ஒரு நியாயமான காரணத்திற்காக அனைத்து ஹிந்துக்களும் நிர்மூலமாக்கப்பட்டால் அவர் கவலைப்படமாட்டார். போர் என்று வந்தால், பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் ஐந்தாவது தூணாக இருக்க முடியாது. பாகிஸ்தானுடன் விசுவாசமாக இல்லாவிட்டால், அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும். அதேபோன்று பாகிஸ்தானுடன் விசுவாசமாக இருக்கின்ற முஸ்லீம்கள் இந்திய ஒன்றியத்தில் இருக்கக்கூடாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த அறிக்கை சரியானதுதான். ஆனாலும் முழுமையானது அல்ல என்று காந்தி உடனடியாகக் கூறியிருந்தார். தனது எண்ணத்தை தான் மாற்றிக் கொள்ளவில்லை என்று அந்தக் கூட்டத்தில் கூறியிருந்த அவர் "அவர்கள் விரும்புகின்ற ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் எதையுமே புதிய அரசாங்கம் கொண்டிருப்பதற்கு தன்னிடம் இடமிருக்கவில்லை" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

முதலாவது வந்த அந்த அறிக்கை முழுமையானது இல்லை என்பதை ஜான் மற்றும் டிரான்மல் இருவருமே அறிந்திருந்தனர் என்றாலும் அவர்கள் சந்தேகம் கொண்டவர்களாகவே இருந்தனர்.  தன்னையே மேற்கோள் காட்டிய ஜான் “பரிந்துரைக்கப்பட்டவர்களிலே அவர் (காந்தி) மிகப் பெரிய ஆளுமை என்பது உண்மைதான் - அவரைப் பற்றி நிறைய நல்ல விஷயங்களைச் சொல்ல முடியும் –என்றாலும்,  அவர் அமைதிக்கான தூதர் மட்டுமே அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்; முக்கியமாக அவர் ஒரு தேசபக்தர். (…) மேலும் காந்தி அப்பாவி இல்லை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். அவர் ஒரு சிறந்த நீதிபதி மற்றும் வழக்கறிஞர்” என்று தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்: பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என்றே ஒரு மாதத்திற்கு முன்னராக காந்தியின் அறிக்கையை குழுத்தலைவர் சந்தேகித்ததாகத் தெரிகிறது. 1947ஆம் ஆண்டு இருந்த ஐந்து உறுப்பினர்களில் மூன்று பேர் காந்திக்கு விருது வழங்குவதை எதிர்த்ததால், குவாக்கர்ஸ் குழுவிற்கு அந்த விருதை ஒருமனதாக வழங்க அந்தக் குழு முடிவு செய்தது.

1948: மரணத்திற்குப் பிந்தைய விருது வழங்க கருதப்பட்டது

அந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் விருதைப் பரிந்துரைப்பதற்கான இறுதி நாளுக்கு இரண்டு தினங்கள்  முன்னர், 1948 ஜனவரி 30 அன்று மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். காந்தியின் பெயரைக் குறிப்பிட்டு குழுவிற்கு ஆறு கடிதங்கள் கிடைத்தன; பரிந்துரைத்தவர்களில் குவாக்கர்ஸ் மற்றும் அதற்கு முன்னால் விருது பெற்ற எமிலி கிரீன் பால்ச் ஆகியோர் அடங்குவர். மூன்றாவது முறையாக காந்தி குழுவின் சுருக்கப்பட்டியலுக்குள் வந்தார் - இந்த முறை அந்தப் பட்டியலில் மூன்று பெயர்கள் மட்டுமே இருந்தன. தனது வாழ்க்கையின் கடைசி ஐந்து மாதங்களில் காந்தியின் நடவடிக்கைகள் குறித்து குழுவின் ஆலோசகரான சீப் தனது அறிக்கையை எழுதினார். நெறிமுறை மற்றும் அரசியல் அணுகுமுறையில் தனது ஆழ்ந்த அடையாளத்தை தனது வாழ்க்கை முறையின் மூலமாக காந்தி ஏற்படுத்தி வைத்திருக்கிறார். “இந்த விஷயத்தில் காந்தியை மதங்களின் நிறுவனர்களுடன் மட்டுமே ஒப்பிட முடியும்” என்று குறிப்பிட்டு இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் ஏராளமான மக்களிடம் அது ஒரு தரமுறையாக நிலவுகிறது என்று முடித்திருந்தார்.

மரணத்திற்குப் பின் யாருக்கும் அமைதிக்கான நோபல் விருது வழங்கப்பட்டதில்லை என்றாலும், சில சூழ்நிலைகளில் நோபல் விருதுகள் மரணத்திற்குப் பின்னரும் வழங்கப்படலாம் என்றே அந்த நேரத்தில் நடைமுறையில் இருந்த நோபல் அறக்கட்டளையின் விதிகள் இருந்தன. அதனால் காந்திக்கு விருது வழங்க முடியும் என்ற சாத்தியம் இருக்கவே செய்தது. இருப்பினும், காந்தி ஓர் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல, எந்தவொரு சொத்தையும் அவர் விட்டுவிட்டுச் செல்லவில்லை, இறுதி விருப்பத்தையும் எழுதாததால் விருதிற்கான பணத்தை யாரிடம் தருவது? நார்வே நோபல் நிறுவனத்தின் இயக்குனரான ஆகஸ்ட் ஷூ, மரணத்திற்குப் பின் விருதை குழு வழங்கினால்  ஏற்படுகின்ற நடைமுறை விளைவுகளை பரிசீலிக்குமாறு குழுவின் ஆலோசகர்களில் ஒருவரான  வழக்கறிஞர் ஓலே டோர்லீஃப்  ரீட்டிடம் கேட்டுக் கொண்டார். பொதுப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் வகையிலான சாத்தியமான பல தீர்வுகளை ரீட் பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து, சுவீடனில் உள்ள விருது வழங்கும் நிறுவனங்களின் கருத்தையும் அவர் கேட்டார். அவற்றின் பதில்கள் எதிர்மறையாகவே இருந்தன. விருது வழங்குவதென குழுவின் முடிவு எடுக்கப்பட்ட பின்னர், விருது பெற்றவர் இறந்தாலொழிய மரணத்திற்குப் பிந்தைய  விருதுகளைத் தரக்கூடாது என்றே அந்த நிறுவனங்கள் கருதின.

"உயிருடன் வாழ்ந்து வருகின்ற பொருத்தமானவர் யாரும் இல்லை" என்ற அடிப்படையில் அந்த ஆண்டு யாருக்கும் விருதை வழங்குவதில்லை என்று 1948 நவம்பர் 18 அன்று நார்வே நோபல் குழு முடிவு செய்தது. "மரணத்திற்குப் பிந்தைய விருது என்பது விருதை நிறுவியவரின் இறுதி விருப்பத்தின் நோக்கங்களுக்கு முரணானது என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமுமில்லை" என்று குழுவின் தலைவரான குன்னர் ஜான் தனது நாட்குறிப்பில் எழுதினார்: முடிவில் தலைவரின் கூற்றை அவரது  மூன்று சகாக்கள்  ஒப்புக் கொண்டனர்.  காந்திக்கு  மரணத்திற்குப் பிந்தைய விருது தருவதற்கு ஆப்டெடல் மட்டுமே ஆதரவாக இருந்தார்.

"உயிருடன் வாழ்ந்து வருகின்ற பொருத்தமானவர் இல்லை" என்று அறிவித்தது குறித்து, காந்தியைத் தவிர்த்து இறந்து போன அமைதிக்காகப் பணிபுரிந்த வேறொருவரை, அதாவது 1948 செப்டம்பர் மாதம் கொலை செய்யப்பட்டிருந்த பாலஸ்தீனத்திற்கான ஸ்வீடனின் ஐ.நா தூதரான கவுண்ட் பெர்னாடோட்டை அந்தக் குழு மனதில் கொண்டிருந்ததாக பின்னர் ஊகங்கள் எழுந்தன. 1948இல் பெர்னாடோட் விருதிற்காகப் பரிந்துரைக்கப்படவில்லை என்பதால் அந்த ஊகங்களை நிராகரிக்கலாம்.

ஆக, இன்னும் ஓராண்டு காந்தி உயிருடன் இருந்திருந்தால் அமைதிக்கான நோபல் விருதைப் பெறுவதற்காக அவர் ஒஸ்லோவுக்கு  அழைக்கப்பட்டிருப்பார் என்று  கருதுவது  நியாயமானதாகவே தெரிகிறது.

அமைதிக்கான நோபல் விருது காந்திக்கு ஏன் வழங்கப்படவே இல்லை?

1960 வரையிலும், அமைதிக்கான நோபல் விருது கிட்டத்தட்ட ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்களுக்கு மட்டுமே  வழங்கப்பட்டிருந்தது. பின்னோக்கிப் பார்த்தால், நார்வே நோபல் குழுவின் பார்வை மிகவும் குறுகியதாக இருப்பதாகத் தோன்றலாம். ஏற்கனவே விருது பெற்றவர்களிடமிருந்து காந்தி மிகவும் வித்தியாசமானவராக இருந்தார். அவர் உண்மையான அரசியல்வாதியோ அல்லது சர்வதேச சட்டத்தை ஆதரிப்பவரோ அல்ல, முக்கியமாக அவர் மனிதாபிமான நிவாரணப் பணியாளரோ அல்லது சர்வதேச அமைதி மாநாடுகளின் அமைப்பாளரோ அல்ல என்பதால், விருது கிடைத்திருந்தால், அந்த விருதைப் பெற்ற புதிய இனத்தைச் சேர்ந்தவராகவே அவர் நிச்சயம் இருந்திருப்பார்.

காந்திக்கு வழங்கப்படுகின்ற விருது குறித்து பிரிட்டிஷ் எதிர்விளைவு ஏற்படுவதற்கான சாத்தியத்தை நார்வே நோபல் குழு கருத்தில் கொண்டதாக எந்த குறிப்பும் காப்பகங்களில் இல்லை. ஆகவே, பிரிட்டிஷ் அதிகாரிகளைத் தூண்டி விட விரும்பாததாலேயே அந்தக் குழுவின் உறுப்பினர்கள் காந்தியைத் தவிர்த்தனர் என்பதாக ஏற்பட்டிருந்த கருதுகோள் நிராகரிக்கப்படலாம் என்றே தெரிகிறது.

1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலும், காந்தியின் பிரார்த்தனைக் கூட்ட அறிக்கையும், தன்னிடமிருந்த நிலையான சமாதானக் கொள்கையை அவர் கைவிடப் போகிறாரா என்று பொதுமக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதே குழுவின் பெரும்பான்மை மூலம் அவர் தேர்ந்தெடுக்கப்படாததற்கு முதன்மைக் காரணங்களாக இருப்பதாகத் தெரிகிறது. இன்றைய நிலைமையைப் போல், அமைதிக்கான விருதை பிராந்திய மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான தூண்டுதலாகப் பயன்படுத்த நார்வே நோபல் குழு முயற்சிக்கும் பாரம்பரியம் அப்போது இருந்திருக்கவில்லை.

தனது வாழ்க்கையின் கடைசி மாதங்களில், இந்தியப் பிரிவினையைத் தொடர்ந்து ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் எழுந்த வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர காந்தி கடுமையாக உழைத்தார். குன்னர் ஜானின் நாட்குறிப்பில் நவம்பர் 18 அன்று எழுதியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ள பதிவைத் தவிர, 1948ஆம் ஆண்டில் காந்தியின் பெயரைப் பரிசீலித்த நார்வே நோபல் குழுவின் விவாதங்களைப் பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாது. ஆனால் மரணத்திற்குப் பிந்தைய விருதை காந்திக்கு வழங்குவது குறித்து அவர்கள் தீவிரமாக கருத்தில் கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. முறையான காரணங்களுக்காக, அந்த விருதை வழங்காமல் 1948க்கான விருது தொகையை செலவழிக்க வேண்டாம் என்றும் அந்த விருதை ஒரு வருடம் கழித்து, வழங்கிட முன்பதிவு செய்து வைப்பது என்றும் அந்தக் குழு முடிவு செய்தது. விருது பெற்றவர்களின் பட்டியலில் மகாத்மா காந்திக்கு இடம் இருக்க வேண்டும் என்று பலரும் கருதியது, மவுனத்துடன் ஆனால் மரியாதையாக முடிவெடுக்காமல் விடப்பட்டது.

https://www.nobelprize.org/prizes/themes/mahatma-gandhi-the-missing-laureate

- தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு

(நோபல் விருதிற்கான இணையதளத்தில் 1999 டிசம்பர் 1 அன்று வெளியான கட்டுரை.)

;