புளோரிடா:
அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து நான்கு விண்வெளி வீரர்கள் (அமெரிக்காவில் இருந்து மூன்றுபேரும், ஜப்பானில் இருந்து ஒருவரும்) சர்வதேச விண் வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வழங்கிய ராக்கெட் மற்றும்கேப்சியூல் மூலமாக இந்த விண்வெளி வீரர்கள், சுற்று வட்டப் பாதையை அடைந்தனர்.இதைத் தொடர்ந்து, நாம் ஒரு புதிய அத்தியாயத்தில் நுழைகிறோம் எனச் சொல்லி இருக்கிறது நாசா. பூமியின் கீழ் சுற்று வட்டப் பாதைக்கு, விண்வெளி வீரர்கள் வழக்கமாகப் பயணிப்பதை, வணிக ரீதியிலான தனியார் நிறுவனங்கள் செய்வதைத் தான் ‘புதிய அத்தியாயம்’ என்று நாசா கூறியிருக்கிறது.
அமெரிக்காவின் மைக்கேல் ஹாப்கின்ஸ், விக்டர்குலோவர், ஷனான் வாக்கர் மற்றும் மிகுந்த அனுபவமுள்ள ஜப்பானிய விண்வெளி மையத்தின் விண்வெளி வீரரான சொய்சி நொகுச்சி ஆகியோர்சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ளனர். இந்த திட்டத்தில் பங்கெடுத்துள்ள நொகுச்சி வரலாற்றிலேயே சோயஸ் மற்றும் ஷட்டில் இயந்திரம் உட்பட, மூன்று வகையான விண்வெளி வாகனத்தில் பயணித்த மூன்றாவது நபராகிறார்.இந்த விண்வெளி வீரர்கள் குழுவைச் சுமந்து செல்லும் ஃபால்கன் ராக்கெட் மற்றும் டிராகன் கேப்சியூல், கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, நவம்பர் 16 2020) 00:27 (இந்திய நேரப்படி அதிகாலை 5.57மணி நேரத்துக்குப் புறப்பட்டது.
சர்வதேச விண்வெளி (ஐஎஸ்எஸ்) நிலையத்தைச் சென்றடைய ஒரு நாளுக்குச் சற்று அதிகமான நேரமாகும். செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி காலை9.30மணிக்கு விண்வெளி மையத்துடன் இணைப்பதற்கு நேரம் குறித்து இருக்கிறார்கள்.விண்வெளி மையத்துக்கு, இந்த குழுவினர் வந்து சேர்ந்தால், அவர்கள், நாசாவின் கேட் ரூபின்ஸ்மற்றும் ரஷ்ய விண்வெளி ஏஜென்சியான ரஷ்காஸ்மாஸ் நிறுவனத்தின் (Roscosmos) விண்வெளி வீரர் செர்கி ரிஸ்கொவ் மற்றும் செர்கி குட் ஸ்வெர்ச்கொவ் உடன் இணைவார்கள்.பூமியில் இருந்து 410 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் விண்வெளி நிலையத்தில், மைக்ரோ கிராவிட்டி சூழலில், ஏழு பேர் இருப்பது, அறிவியல் ஆராய்ச்சியின் அளவை மூன்று மடங்காக அதிகரிக்கும்.
நாசாவுடன் ஒப்பந்தம்
விண்வெளி டேக்ஸி சேவை என்கிற விண் வெளிக்கு இப்படி விஞ்ஞானிகளை அனுப்பும் பணியை மேம்படுத்த, சோதனை செய்ய, பறக்க வைக்க, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், நாசா உடன் 3 பில்லியன் டாலர் மதிப்புக்கு மேல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், கடந்த மே மாதம் ஒரு சோதனைப் பயணத்தை நடத்தியது. அதில் டக் ஹர்லே மற்றும்பாப் பெஹ்ன்கென், சர்வதேச விண்வெளி மையத்துக்குஅழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டார்கள்.
இரு நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்த ஏற்பாடுகளின்படி, ஆறு பயணங்கள் நடைபெற உள்ளன. அதில் இது, முதல் பயணமாகும். இதேபோல, நாசா, போயிங் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடனும் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து இருக்கிறது. ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சேவையை விட, போயிங் நிறுவனத்தின் சேவை ஒரு வருடம் பின் தங்கி இருக்கிறது.புவியின் கீழ் சுற்று வட்டப் பாதைக்கான போக்குவரத்தை, நாசா, மற்ற நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழியாகக் கொடுப்பதால், நாசாவுக்கு பில்லியன் கணக்கில் கொள்முதல் செலவுகள் குறைவதாகச் சொல்கிறது. இப்படி மிச்சமாகும் பணத்தை, நாசா தன் நிலவு மற்றும் செவ்வாய் கிரக திட்டங்களுக்கு செலவழிக்க விரும்புகிறது. 2024-ம் ஆண்டுக்குள், விண்வெளி வீரர்களைச் சந்திரனுக்கு அழைத்துச் செல்லும் பெரிய ராட்சத ராக்கெட்டை சோதனை செய்யும் தருவாயில் இருக்கிறது நாசா.தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நான்கு விண்வெளி வீரர்களும், 6 மாதங்களுக்கு அங்கேயே தங்குவார்கள்.இந்த குழுவினர், பூமிக்கு வருவதற்கு முன் பொறுப்புக்களைக் கைமாற்ற, மற்றொரு ஸ்பேஸ் எக்ஸ் குழுவினருடன் இணைக்கப்படுவார்கள்.கடந்த 2011-ம் ஆண்டே, நாசா, இறக்கையுள்ள விமான ஷட்டில்களுக்கு ஓய்வளித்துவிட்டது. இடைப் பட்ட ஆண்டுகளில், நாசா, ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் இருக்கைகளை வாங்கிக் கொண்டு இருந்தது. சோயுஸ் விண்கலத்தில் இருக்கைகளை வாங்கும் நடவடிக்கையை தற்போது கைவிட்டாலும், அமெரிக்க விண்வெளி வீரர்கள், தொடர்ந்து சோயுஸ் விண்கலம் வழியாகவும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், எந்த பணமும் கைமாறாது. அதற்குப் பதிலாக, ரஷ்ய விண்வெளி வீரர்களுக்கு, அமெரிக்க கேப்சியூல்களில் இருக்கைகள் வழங்கப்படும்.
இப்போது சென்றுள்ள புதிய குழு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் காலங்களில், குறைந்தபட்சம் நான்கு விண்வெளி நடைப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். இந்த நான்கு விண்வெளி நடைப் பயணத்தில், விண்வெளி வீரர்கள், பிரிட்டனின் முதல் மற்றும் முக்கியமான பங்களிப்பை சர்வதேச விண்வெளி நிலையத்தில் பொருத்துவார்கள்.அது கோல்கா கம்யூனிகேஷன் டெர்மினல் என்பதாகும். இதைப் பிரிட்டனைச் சேர்ந்த எம்டிஏ என்கிற நிறுவனம் தயாரித்தது. இந்த ரேடியோ கருவி மூலம்விண்வெளி வீரர்கள், பூமியில் இருக்கும் விஞ்ஞானிகள் மற்றும் தங்களின் குடும்பத்தினரோடு, வீட்டில் இருக்கும் அகன்ற அலைவரிசை வேகத்தில் தொடர்பு கொள்ளலாம். கோல்கா டெர்மினல், ஐரோப்பாவின் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆராய்ச்சி மாதிரியான கொலம்பஸ்ஸின் வெளிப்புறத்தில் பொருத்தப் படும்.
பிபிசி செய்தியுடன்)