உதகமண்டலம்,ஜூன் 30- நீலகிரி மாவட்டத்தில் வனத் துறை ஓய்வு விடுதிகளில் தங்குவதற்கான கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம், அவலாஞ்சி உள்ளிட்ட இடங்களில் வனத் துறைக்குச் சொந்தமாக தங்கும் விடுதி களும், வன ஓய்வு இல்லங்களும் உள்ளன. இவற்றில் தங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்னரே சுற்றுலாப் பயணிகள் முன் பதிவு செய்து கொள்வது வழக்கம். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனத் துறைக்குச் சொந்தமான ஓய்வு விடுதிகளில் ஜூலை, ஆகஸ்ட், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 4 மாதங்களில் தங்குவதற்கான விடுதிக் கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக வனத் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.