ஊட்டி நகரின் மையப் பகுதியில் கரடி புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரை சுற்றி தொட்டபெட்டா, கேர்ன்ஹில், கம்பி சோலை உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளது. இந்த வனப்பகுதிகளில் காட்டெருமை, கடமான், சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று வனப்பகுதியிலிருந்து வெளியேறிய கரடி, ஊட்டி மையப்பகுதியான காபி ஹவுஸ் அருகில் உள்ள புது அக்ரஹாரம் தெருவில் நள்ளிரவு நடமாடி கொண்டிருந்தது. கரடியின் வருகையைப் பார்த்த தெரு நாய்கள் தலைதெறிக்க சத்தம் போட்டவாறு அங்குமிங்கும் ஓடி தப்பித்தது. இந்த சத்தம் கேட்ட குடியிருப்பு வாசிகள் ஒரு சிலர் வெளியே வந்து கரடியைப் பார்த்து பீதி அடைந்தனர். பின்னர் அக்ரஹாரம் தெருவிலிருந்து மெதுவாக கிளம்பி சல்லிவன் கோர்ட் ஓட்டல் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
நள்ளிரவு என்பதால் அப்போது ஆட்கள் நடமாட்டம் இல்லை. அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டும் சென்று வந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் அந்தந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- ஊட்டியின் மையப் பகுதியில் கரடியின் நடமாட்டம் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான எல்க்ஹில் அல்லது கால்வாய் பகுதியில் இருந்து வந்திருக்கலாம். வெளியூர் செல்பவர்கள் இரவு பணி முடிந்து வருபவர்கள் யாரேனும் அஜாக்கிரதையாக வீடுகளுக்கு வரும்போது கரடியிடம் மாட்டி விட்டால் நிலைமை மோசமாகிவிடும். நகருக்குள் போதுமான உணவு கிடைக்காததால் உணவு மற்றும் தண்ணீர் தேடி நகருக்குள் வந்து இருக்கலாம். எனவே வனத்துறையினர் கரடி நடமாட்டத்தை கண்காணித்து கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.
வனத்துறையினர் ஆய்வு
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர் நேற்று மதியம் புது அக்ரகாரம் பகுதிக்கு நேரில் சென்று அங்கிருந்த குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் இதற்கு பின்னர் கரடி நடமாட்டம் இருந்தால், பொதுமக்கள் கற்களை எடுத்து தாக்க முயற்சி செய்யாமல், தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினர்.
ஏற்கனவே கடந்த 2 வருடத்திற்கு முன்பு ஊட்டி மத்திய போலீஸ் நிலையம் முன்பு கரடி வந்தது. மேலும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இதேபோன்று புது அக்ரஹாரம் பகுதியில் தெருக்களில் ரத்தம் வடிந்த நிலையில் இருந்ததால் சிறுத்தை புகுந்து இருக்கலாம் என்று பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தி சென்றது குறிப்பிடத்தக்கது.ய