tamilnadu

img

புதிய உற்பத்தியாளர்கள் வருகையால் ரெம்டெசிவிர் மருந்தின் பற்றாக்குறை நீங்குகிறது...   

தில்லி 
உலகை மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது 180-க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டி வருகிறது. இந்த கொடிய வைரஸின் சிகிச்சைக்கும், நோய் தடுப்பிற்கும் இன்று வரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. ரஷ்யா "ஸ்புட்னிக் வி" என்ற தடுப்பு மருந்தை தயார் நிலையில் வைத்துள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இந்தியா, அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில், உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவிற்கு முக்கிய சிகிச்சை மருந்தாக இருப்பது ரெம்டெசிவிர் தான். உலகில் தினமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புதிய கொரோனா நோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் இந்த ரெம்டெசிவிர் மருந்திற்கு கடந்த ஒரு மாத காலமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.   

இந்த பற்றாக்குறை இந்த மாத இறுதியில் நீங்கும் என உலக மருந்து உற்பத்தி துறை மணி - கண்ட்ரோல் எனப்படும் செய்தி தளத்திற்கு தகவல் அளித்துள்ளன. காரணம் ஜைடஸ் காடிலா மற்றும் டாக்டர் ரெட்டீஸ் போன்ற மருந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்தியில் அதிரடி மாற்றம் செய்ய இருப்பதாலும், மேலும் பல புதிய மருந்து நிறுவனங்கள் ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பில் களமிறங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 

இதனால் இம்மாத இறுதியில் சுமார் 8 லட்சம் ரெம்டெசிவிர் டோஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை சிப்லா, ஹெட்டெரோ மற்றும் மைலன் போன்ற மருந்து நிறுவனங்கள் ரெம்ட்சிவிர் மருந்து தயாரிப்பில் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.  

;