tamilnadu

img

இந்நாள் ஜுலை 06 இதற்கு முன்னால்

1885 - லூயி பாஸ்ச்சர்(பாஸ்டியர்), வெறிநாய்க்கடிக்கான மருந்தை, ஜோசப் மெய்ஸ்ட்டர் என்ற 9 வயதுச் சிறுவனுக்குச் செலுத்தி வெற்றிகண்டார். அடிப்படையில் வேதியியல் பேராசிரியரான  பாஸ்ச்சர், டார்ட்டாரிக் அமிலத்தை நுண்ணிய படிகங்களாகப் பிரித்து, கண்ணாடிப் பிம்பங்களாக இரு வடிவங்களில் அதன் மூலக்கூறுகள் இருப்பதையும், படிகங்களின் ஒளியில் பண்புகளுக்கு அதுவே காரணமென்றும் கண்டறிந்தவர். மூலக்கூறுகளின் சமச்சீரின்மையை முதன்முதலில் விளக்கிய பாஸ்ச்சரின் இக்கண்டுபிடிப்பு, மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.

பாஸ்ச்சரின் மாணவர் ஒருவர், தன் தந்தை உற்பத்தி செய்யும் பீட்ரூட் மது கெட்டுப்போகும் பிரச்சினைக்குத் தீர்வு கேட்டதையடுத்து, அதை ஆய்ந்த பாஸ்ச்சர், சர்க்கரையிலிருந்து மதுவை உருவாக்கும் நொதித்தலுக்கு யீஸ்ட்-தான் காரணம் என்று கண்டுபிடித்தார். அத்துடன், காற்றுப்புகும்படி வைத்தால் நொதித்தல் குறைவாக இருக்கும் என்ற பாஸ்ச்சரின் கண்டுபிடிப்பு பாஸ்ச்சர் விளைவு என்றழைக்கப்படுகிறது. இந்த ஆய்வின் தொடர்ச்சியாக பியர், பால் முதலானவை கெட்டுப்போக நுண்ணியிரிகள்தான் காரணம் என்பதையும் கண்டுபிடித்தார். கிருமி நீக்கம் செய்வதற்கு இவை அதிக வெப்பநிலைக்கு உட்படுத்தப்படும். குறைவான வெப்பநிலையைப் பயன்படுத்தி, கெட்டுப்போகச் செய்யும் நுண்ணியிரிகளை மட்டும் அழிக்கும் முறையைப் பாஸ்ச்சர் கண்டுபிடித்தார்.

அது அவரது பெயராலேயே பாஸ்ச்சரைசேஷன் என்று அழைக்கப்படுகிறது. அதுதான் இன்று நாம் வாங்கும் பாஸ்ச்சரைஸ்ட்டு மில்க்-கை உருவாக்கும் முறை! நுண்ணியிரிகள்குறித்த ஆய்வில், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் நோய்கள் உண்டாக அவை காரணமென்ற பாஸ்ச்சரின் கண்டுபிடிப்பே, ஆண்ட்டிசெப்ட்டிக் முறைகளை ஜோசஃப் லிஸ்ட்டர் உருவாக்கக் காரணமாக இருந்தது. கிருமிக்கொள்கை என்பது ஏற்கெனவே இருந்தாலும், அதில் பாஸ்ச்சரின் கண்டுபிடிப்புகளால் ஏற்பட்ட முன்னேற்றங்களால் அவர் நுண்ணுயிரி இயலின் தந்தை என்று புகழப்படுகிறார்.

கோழிகளுக்கு ஏற்படும் காலரா பற்றிய ஆய்வில், எதிர்பாராமல் சரியாக வளராமற்போன பாக்டீரியங்களைச் செலுத்தியபோது, கோழிகளுக்கு மீண்டும் நோய் தாக்கவில்லை. அதனால், அம்மைக்கான தடுப்பூசியைப்போன்றல்லாமல், செயற்கையாகப் பலவீனப்படுத்தப்பட்ட பாக்டீரியங்களைக்கொண்டு கோழிகளின் காலரா, பசுக்களின் ஆந்த்ராக்ஸ் நோய்களைக் குணப்படுத்திய பாஸ்ச்சர் அதே முறையில், பலவீனப்படுத்தப் பட்ட வைரசைப் பயன்படுத்தி வெறிநாய்க்கடிக்கான மருந்தை யும் உருவாக்குவதிலும் வெற்றிகண்டார்!