1190 - புனித ரோமப் பேரரசின் இடைக் காலத்திய அரசர்களில் மிகச்சிறந்தவராகக் குறிப்பிடப்படும் முதலாம் பிரடரிக் பார்பரோசா, மூன்றாம் சிலுவைப்போரில் ஜெருசலேமுக்குச் செல்லும் வழியில், ஆசியா மைனர் பகுதியிலுள்ள சலேஃப்(தற்போதைய துருக்கியிலுள்ள கோக்சு) ஆற்றில் மூழ்கி இறந்தார். உள்ளூர்க்காரர்களான ஆர்மீனியர்களின் வழிகாட்டுதலின்படி, ஆற்றைக் குறுக்கு வழியில் கடக்க முயற்சித்தபோது மூழ்கியதாகக் கூறப்படும் இவரது இறப்பைப் பற்றி, பல்வேறு மாறுபட்ட தகவல்கள் குறிப்பிடப்படுகின்றன. உடனிருந்தவர்கள் தடுத்ததைக் கேட்காமல், ஆற்றை நீந்திக்கடக்க முயற்சித்தபோது, அவர் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டதாக, ஆஸ்திரிய வரலாற்றாசிரியர் ஆன்ஸ்பெர்ட் குறிப்பிட்டிருக்கிறார்.
அவரது குதிரை தூக்கி வீசியதில் ஆற்றில் விழுந்த அவர், அணிந்திருந்த கவசங்களின் எடையால் மூழ்கிப்போனதாக மற்றொரு தகவல் கூறுகிறது. இடுப்பளவுகூட இல்லாத நீரில் குளிக்கச்சென்ற அவர், அடித்துச் செல்லப்பட்டது, அவரால் தீமைகள் ஏற்படாமலிருக்கக் கடவுளே செய்த செயல் என்று குர்திய வரலாற்றாசிரியர் இபின் அல்-அதிர் குறிப்பிடுகிறார். நீச்சலின்மீதான ஆர்வத்தால் இறங்கியிருந்தாலும், நீண்ட பயணத்தால் களைத்திருந்ததால் அவர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்று குறிப்பிடும் விட்டல்ஸ்பாக்-கின் ஓட்டோ, அவருக்கு நெருக்கமானவர் என்பதால் அது நம்பிக்கைக்குரியதாகக் கருதப்படுகிறது. அவரது உடலை ஜெருசலேமில் அடக்கம் செய்யவேண்டுமென்று, வினிகரில் பதப்படுத்த முயன்று, முடியாததால், எலும்பு உள்ளிட்டவை ஆணட்டியோக், டைர், டார்சஸ் தேவாலயங்களில் வைக்கப் பட்டன.
இவரது மறைவால் நிலைகுலைந்த பெரும்பாலான ஜெர்மானிய வீரர்கள், சிலுவைப்போரைக் கைவிட்டு, நாடு திரும்பிவிட்டனர். பிரடரிக்கின் காலத்தில்தான், ஜெர்மன் பேரரசான ரோமப் பேரரசின் பெயரில், ‘புனித’ என்பது சேர்க்கப்பட்டது. போப் தலைமையிலான திருத்தந்தை நாடுகளின் அதிகாரத்திற்கு எதிராக, இப்பெய ரைச் சூட்டினார். போப்பின் அதிகாரத்திற்குட்பட்டிருந்த இத்தாலியின் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக 5 முறை போர்தொடுத்ததால், அவர்கள் இவருக்குச் சூட்டிய பெயர் பார்பரோசா. அதற்கு இத்தாலிய மொழியில் சிவப்புத் தாடி என்று பொருள். உண்மையிலேயே சிவப்புநிற தாடியைக் கொண்டிருந்த இவருக்கு, இத்தாலியர்கள் அழைத்த அதே சிவப்புத் தாடி என்ற பொருளுள்ள கெய்சர் ராட்பர்ட் என்ற ஜெர்மானி யப் பெயரும் பின்னர் ஏற்பட்டது. இவரால் மறுவுருவாக்கம் செய்யப்பட்ட ‘ரோமானிய சட்டத்தின் ஆட்சி’, போப்பின் அதிகாரங்களுக்கிணையான மாற்றாக விளங்கியது
- அறிவுக்கடல்