tamilnadu

img

இந்நாள் ஜுன் 19 இதற்கு முன்னால்

1961 - அரசுப் பணிகளில் பணியாற்ற, மத நம்பிக்கை அவசியமில்லை என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேரிலேண்ட் மாநிலத்தில் நோட்டரி பப்ளிக்-ஆக நியமிக்கப்பட்ட, கடவுள் நம்பிக்கையற்ற ஒருவர், ‘கடவுள்மீது ஆணையாக’ உறுதிமொழி ஏற்க மறுத்ததால் அவருக்கு அப்பணி மறுக்கப்பட்டது. நாத்திகராக இருப்பதற்கு அமெரிக்க அரசியல் சட்டம் உரிமையளித்திருப்பதாக அவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேல்முறையீட்டில், கடவுளை நம்பச்சொல்லி யாரும் அவரை வற்புறுத்தவில்லையென்றும், அதைப்போலவே, நோட்டரி பப்ளிக்காக இருக்குமாறும் அவரை யாரும் வற்புறுத்தவில்லையென்றும் மேரிலேண்ட் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ‘அமெரிக்கக் கூட்டரசோ, மாநில அரசுகளோ தேவாலயத்தை நிறுவ உரிமையில்லை. அவை ஒரு மதத்திற்கோ, அனைத்து மதங்களுக்குமோ உதவவோ, ஒன்றைவிட மற்றொரு மதத்திற்கு முன்னுரிமையளிக்கவோ கூடாது. ஒருவரை தேவாலயத்திற்குப் போகுமாறோ, போகக்கூடாதென்றோ, எந்த மதத்தையும் நம்புமாறோ, நம்பக்கூடாதென்றோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ வற்புறுத்தக்கூடாது’ என்று அமெரிக்க அரசியல் சட்டத்தின் முதல் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை, மத அமைப்புகளின் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கும் பயணக்கட்டணம் திரும்ப வழங்குவது சட்டவிரோதம் என்று 1947இல் தொடுக்கப்பட்ட வழக்கில் அமெரிக்க உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. இவ்வழக்கில் அதைக் குறிப்பிட்டு, ‘கடவுள்மீது ஆணையாக’ உறுதிமொழி ஏற்கச்சொல்வது அமெரிக்க அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று தீர்ப்பளித்தது. ரோமப் பேரரசின் காலத்திலேயே உருவான யூத எதிர்ப்புணர்வே, ஐரோப்பாவில் அரசப் பதவிகளுக்கு வருபவர்கள் (கிறித்துவ)கடவுளின் பெயரால் உறுதிமொழியேற்கும் பழக்கத்தைத் தோற்றுவித்தது. அமெரிக்காவிலும் இங்கிலாந்துக் குடியேற்றங்களில் கடைப்பிடிக்கப்பட்ட இம்முறையை, கூடாது என்று அமெரிக்க அரசியல் சட்டத்தின் ஆறாவது பிரிவு கூறியதுடன், முதல் திருத்தமும், மத அமைப்புகளுக்கு மதிப்பளிக்கும் சட்டங்களை அமெரிக்கப் பாராளுமன்றம் நிறைவேற்றக்கூடாது என்று கூறியது. இவையிரண்டும் கூட்டரசுக்குத்தான் பொருந்தும் என்பதால், சில மாநில அரசுகள் தங்கள் சட்டங்களில் கொண்டிருந்த இந்த நடைமுறைகள், இத்தீர்ப்புக்குப்பின்தான் செல்லாதவையாயின. ஆனாலும், இன்றும் 8 மாநிலங்களின் சட்டங்களில், இந்த நடைமுறைகள் ஏட்டளவில் தொடர்கின்றன.