tamilnadu

img

இந்நாள் டிச. 16 இதற்கு முன்னால்

1903 - உலகப் புகழ்பெற்ற மும்பை தாஜ்மகால் பேலஸ் ஓட்டல் திறக்கப்பட்டது. அக்கால பம்பாயின் மிகப்பெரிய ஓட்டல்களில் ஒன்றான வாட்சன்’ஸ் ஓட்டல் வெள்ளையருக்கு மட்டும்தான்  என்று கூறி, ஜெம்ஷெட்ஜி டாட்டாவிற்கு அனுமதி மறுத்ததால் அவர் இந்த ஓட்டலைக் கட்டினார் என்று பொதுவாக நம்பப்பட்டாலும், அதற்கு ஆதாரங்களை இல்லை. அத்துடன், இந்த ஓட்டலே வெள்ளையர்கள், அக்கால அரசர்கள் ஆகியோரைத்தான் வாடிக்கையாளர்களாகக் கொண்டிருந்தது என்பதால், அவ்வாறிருக்க வாய்ப்பில்லை. பம்பாயின் மதிப்பை உணர்த்தும் வகையில் ஒரு விடுதி வேண்டும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆசிரியர் கூறிய ஆலோசனையின்படி டாட்டா இதைக் கட்டியதாகக் கூறப்படுவதே நம்பக்கூடியதாக உள்ளது.

சீத்தாராம் கண்டேராவ் வைத்யா, டி.என்.மிர்சா என்ற இந்தியக் கட்டிடக்கலை வல்லுனர்களே இந்தக் கட்டிடத்தை வடிவமைத்தனர். வைத்யா இறந்துவிட்டதால் டபிள்யூ.ஏ.சேம்பர்ஸ் என்ற ஆங்கிலேயப் பொறியாளர் இதைக் கட்டும் பணியைச் செய்தாலும், கட்டிடத்தின் குவிமாடத்தைப் பெரிதாக்கியதைத் தவிர வேறெந்த மாற்றத்தையும் அவர் செய்யவில்லை. கட்டுமானப் பணியின் ஒப்பந்ததாரரான கான்காசாகேப் ருத்தோன்ஜி, இக்கட்டிடத்தின் நடுவிலமைந்துள்ள புகழ்பெற்ற மிதக்கும் படிக்கட்டை வடிவமைத்தார். (படியைத் தாங்கும் அமைப்புகள் அதிகம் வெளியில் தெரியாமல் அமைக்கப்படுபவை மிதக்கும் படிக்கட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.)

அறைகள் அரபிக்கடலைப் பார்த்தவாறு அமைந்திருக்கவேண்டும் என்ற டாட்டா விருப்பத்தின்படி கட்டப்பட்டதால், இக்கட்டிடம் நகருக்கு எதிர்ப்புறமாகத் தவறுதலாகக் கட்டப்பட்டுவிட்டதாகக் கூறப்படுவதுண்டு! 604 அறைகள் கொண்ட இவ்விடுதியைக் கட்ட இன்றைய மதிப்பில் சுமார் ரூ.285 கோடி செலவானது. மின்சாரம், அமெரிக்க மின்விசிறிகள், நீராவியால் இயங்கிய ஜெர்மானிய லிஃப்ட், துருக்கிய குளியல் தொட்டிகள், ஆங்கிலேய சமையல்காரர்கள், நாள் முழுவதும் இயங்கும் உணவகம், குளிரூட்டப்பட்ட நடன-கூட்ட அரங்கு, டிஸ்க்கொதே ஆகியவற்றை இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்திய விடுதி இதுதான். பம்பாயில் உரிமம் பெற்ற மது பார் தொடங்கிய முதல் விடுதியும் இதுதான். இது கட்டப்பட்டு 21 ஆண்டுகள் கழித்துத்ததான், இதனருகில் இந்தியா கேட் கட்டப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போது இது மருத்துவமனையாகச் செயல்பட்டது. இதன் விரிவாக்கமாக அருகிலுள்ள டவர் என்பதை 1973இல் கட்டிய டாட்டா குழுமம், அதன்பின்னரே விடுதித் தொழிலில் கவனம் செலுத்தத்தொடங்கி, இன்று இந்தியாவில் 84ம், பிற நாடுகளில் 16மாக 100 ஓட்டல்களைக்கொண்டுள்ளது!

அறிவுக்கடல்