tamilnadu

img

முதலில் நிலவிய குழப்பங்கள்

மருத்துவ இதழான தி லான்செட்டில் வெளியிடப்பட்ட முக்கியமான கட்டுரை ஒன்றில் “டிசம்பர் 1, 2019 அன்று சார்ஸ்-கோவ்-2 நோயின் அறிகுறியோடு முதல் நோயாளி அடையாளம் காணப்பட்டபோது இந்நோய் துவங்கியது” என பேராசிரியர் சாலின் ஹுவாங் எழுதியுள்ளார்.  துவக்கத்தில் இந்த வைரஸ் கிருமியின் இயல்பு குறித்தும், இது ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவுமா என்பது குறித்தும் பரவலான குழப்பம் நிலவியது. ஏற்கனவே அறியப்பட்ட வைரஸ்களில் ஒன்றுதான் இது என்றும், இது பிரதானமாக விலங்குகளிலிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது எனவும் கருதப்பட்டது. 

புதிய கொரோனா வைரஸ் நிமோனியா நோயின் திடீர் தோற்றம் குறித்து முதன் முதலில் எச்சரிக்கை விடுத்த மருத்துவர்களில் ஹூபே மாகாணத்தின் ஒருங்கிணைந்த சீன மற்றும் மேற்கத்திய மருத்துவமனையின் சுவாச மற்றும் அவசரச் சிகிச்சை மருத்துவப் பிரிவின் மருத்துவர் ஜாங் ஜிசியான்னும் ஒருவர் ஆவார்.  ஃப்ளூ நோய்க்கான அறிகுறிகளான அதிக காய்ச்சல் மற்றும் இருமலுடன் இருந்த வயதான தம்பதியரை டிசம்பர் 26ம் தேதியன்று மருத்துவர் ஜாங் கண்டார்.  அவர்களை மேலும் பரிசோதித்ததில், இன்ப்ளூயன்சா ஏ மற்றும் பி, மைக்கோ ப்ளாஸ்மா, க்ளமிடியா, அடினோவைரஸ் மற்றும் சார்ஸ் ஆகிய நோய்களால் அவர்கள் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

 இத்தம்பதியினரின் மகனுக்கு செய்யப்பட்ட சிடி ஸ்கேன் மருத்துவ அறிக்கை, அவரது நுரையீரலின் உட்பகுதியில் ஒரு பகுதி ஏதோ ஒன்றால் நிரம்பியிருப்பதைக் காண்பித்தது. அன்றைய தினமே, கடலுணவு சந்தையின் விற்பனையாளர்களில் ஒருவர் இதே அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நான்கு நோயாளிகள் பற்றிய விவரங்களை வுஹான் நகரம் அமைந்துள்ள ஜியாங்கன் மாவட்டத்தின் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்திற்கு மருத்துவர் ஜாங் தெரிவித்தார்.

அடுத்து வந்த இரு நாட்களில், மேலும் 3 நோயாளிகளை (கடலுணவு சந்தைக்கு சென்று வந்தவர்கள்)மருத்துவர் ஜாங்கும் அவருடன் பணிபுரிவோரும் பார்த்தனர்.  டிசம்பர் 29-ம் தேதியன்று ஹூபே மாகாண நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், சிகிச்சை பெற்று வரும் 7 நோயாளிகளையும் மேலும் நன்கு சோதனை செய்திட நிபுணர்களை மருத்துவமனைக்கு அனுப்பியது.  வைரஸ் கிருமியை கண்டறிவதிலும், அது பற்றிய தகவல்களை தெரியப்படுத்துவதிலும்மருத்துவர் ஜாங்கும் அவரது குழுவினரும் ஆற்றிய அளப்பரிய பணி பிப்ரவரி 6ம் தேதியன்று ஹூபே மாகாணத்தால் அங்கீகரிக்கப்பட்டது.  மருத்துவர் ஜாங்கின் பணியை தடுத்து நிறுத்திட எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. 

இந்த புதிய வைரஸ் குறித்து காணப்பட்ட குழப்பங்களை நீக்கி தெளிவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் வுஹான் மத்திய மருத்துவமனையின் கண் மருத்துவரான டாக்டர் லீ வென்லியாங் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவரான யெய் பென் ஆகிய இரு மருத்துவர்களும் முக்கியமான பங்களிப்பை செய்தனர்.  எந்த தெளிவுமின்றி காணப்பட்ட துவக்க நாட்களில், பொய்யான செய்திகளை பரப்புவதாக அதிகாரிகளால் அவர்கள் இருவரும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டனர் என்பது உண்மைதான். பிப்ரவரி 7ம் தேதியன்று இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவர் லீ உயிரிழந்தார்.

 தேசிய சுகாதார அமைப்பு, ஹூபே மாகாணத்தின் சுகாதார அமைப்பு, சீன மருத்துவர்களின் அமைப்பு மற்றும் வுஹான் மாநகராட்சி நிர்வாகம் போன்ற முக்கியமான மருத்துவ மற்றும் அரசுத் துறைகள், மருத்துவர் லீயின் மறைவுக்குத் தங்களது அஞ்சலியை அவரது குடும்பத்தாரிடம் வெளிப்படையாகத் தெரிவித்தன.  மருத்துவர் லீ வரம்பு மீறி கண்டிக்கப்பட்டதாக வுஹான் மக்கள் பாதுகாப்புக் குழு ஒப்புக் கொண்டது. மேலும், தனது அதிகாரிகளை கடுமையாகத் தண்டித்தது. பொய்யான செய்திகளை பரப்புவதை நிறுத்திக் கொள்ளுமாறு மருத்துவர் யெய் பென்னும் அறிவுறுத்தப்பட்டார். ஆனால், பிப்ரவரி மாதத்தில் மன்னிப்புக் கடிதம் ஒன்று அவருக்கு அனுப்பட்டது. மேலும், உஹான் ஒலிபரப்பு மற்றும் தொலைக்காட்சி நிலையத்தில் பின்னர் அவர் பாராட்டப்பட்டார். 

புதிய வைரஸ் குறித்து மாகாண அதிகாரிகளுக்கு டிசம்பர் 29ம் தேதியன்று தெரிய வந்தது. மறுநாள், இது குறித்த தகவலை அவர்கள் சீன நோய் தடுப்பு மையத்திற்குத் தெரிவித்தனர்.  அதற்கடுத்த நாள், அதாவது டிசம்பர் 31ம் தேதியன்று, இந்நோய் குறித்த தகவலை உலக சுகாதார மையத்திற்கு சீனா தெரிவித்தது.  ஜனவரி 3ம் தேதியன்று வைரஸ் அடையாளம் காணப்பட்டது. ஒரு வாரத்திற்குப் பின்னர், புதிய வைரஸ்சின் மரபணு வரிசை பற்றிய விவரங்களை உலக சுகாதார மையத்துடன் சீனா பகிர்ந்து கொண்டது. இத்தகைய விவரங்களை சீனா பகிர்ந்து கொண்ட காரணத்தாலேயே, இந்நோய்க்கான தடுப்பூசியைக் கண்டறிவதற்கான அறிவியல்பூர்வமான பணிகள் உடனடியாக உலகின் பல்வேறு பகுதிகளில் துவங்கின.  தற்போது 43 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 4 பேர் ஆரம்ப பரிசோதனையில் உள்ளனர். 

சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், சீன மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் மற்றும் சீன அறிவியல் கழகம் ஆகிய அமைப்புகளின் நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு ஏற்படுத்தியுள்ளது.  வைரஸ் மாதிரிகளைக் கொண்டு அவர்கள் பல்வேறு தொடர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இந்த மர்மநோய் பரவலுக்கு புதிய கொரோனா வைரஸ்தான் காரணம் என்பதை ஜனவரி 8-ம் தேதியன்று அவர்கள் உறுதி செய்தனர். இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக முதல் உயிரிழப்பு பற்றி ஜனவரி 11ம் தேதி தெரிவிக்கப்பட்டது. ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதருக்கு இந்நோய் பரவுவதற்கான சான்றுகள் எதுவும் இதுவரை இல்லையென வுஹான் மாநகராட்சி சுகாதார மையம் ஜனவரி 14ம் தேதியன்று கூறியது. ஆனால், வரம்பிற்குட்பட்டு ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என அவர்களால் உறுதியாகக் கூற இயலவில்லை. 

ஒரு வாரத்திற்குப் பின்னர், அதாவது ஜனவரி 20ம் தேதியன்று, புதிய கொரோனா வைரஸ் ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதற்கான வாய்ப்புள்ளது என மருத்துவர் ஜோங் நன்ஷான் (சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான இவர், புகழ்பெற்ற சுவாச நோய் நிபுணர் மற்றும் சீனாவில் சார்ஸ் நோய்க்கு எதிராக முன்னின்று செயல்பட்டவர் ஆவார்.) தெரிவித்தார். இந்த வைரஸ் கிருமியின் தொற்றுக்கு சில மருத்துவப் பணியாளர்களும் ஆளாகினர். அன்றைய தினம், இந்த வைரஸ் கிருமி பரவுவது குறித்து கவனம் செலுத்துமாறு அரசின் அனைத்து அமைப்புகளுக்கும் சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கும், பிரதமர் லீ கேகியாங்கும் அறிவுறுத்தினர்.  அவசரகால சிகிச்சைக்கான நடவடிக்கைகளை துவக்குமாறு தேசிய சுகாதார அமைப்பும், இதர அரசு அமைப்புகளும் கேட்டுக் கொள்ளப்பட்டன. இந்த வைரஸ் கிருமி ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவுவது உறுதி செய்யப்பட்ட மூன்றாவது நாளில் – ஜனவரி 23ம் தேதியன்று – வுஹான் மாநகரில் முழுமையாகக் கதவடைப்பு செய்யப்பட்டது. அதற்கடுத்த நாள், ஹூபே மாகாணத்தில் முதல் நிலை எச்சரிக்கை செயல்படுத்தப்பட்டது. ஜனவரி 25ம் தேதியன்று, பிரதமர் லீ, ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அமைத்தார். இருநாட்களுக்குப் பின்னர் அவர் வுஹான் நகரத்திற்குச் சென்றார். 

முன்பின் தெரிந்திராத வைரஸ்சை எதிர்கொள்ள நேரிட்டபோது இதைத் தவிர வேறு எந்த வழிமுறையில் சீனா செயல்பட்டிருக்க இயலும் என்ற கேள்வியே மிஞ்சுகிறது.  பிப்ரவரி 16 முதல் 24 வரை சீனாவில் ஆய்வு செய்த சென்ற உலக சுகாதார அமைப்பின் குழு, தனது அறிக்கையில் வைரஸ் கிருமியின் பரவலை தடுத்திட தங்களால் இயன்ற அளவு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கு சீன அரசிற்கும், அந்நாட்டு மக்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தது.  பல்லாயிரக்கணக்கான மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் வுஹானை வந்தடைந்தனர்.

வைரஸ் கிருமியின் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2 புதிய மருத்துவமனைகள் உடனடியாக ஏற்படுத்தப்பட்டன. கதவடைப்பு நாட்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிட பல்வேறு நகர அமைப்புகளும் செயல்பட்டன.  நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவனையில் அனுமதித்தும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தியும் இந்நோய் தொற்று பரவுவதை சீன அதிகாரிகள் தடுத்தனர் என ஓர் பிரதான புதிய ஆய்வு தெரிவிக்கிறது.  இத்தகைய இலக்கை கொண்ட கொள்கை மூலம் நோய்த் தொற்றின் சங்கிலித் தொடரில் இருப்பவர்களை அடையாளம் கண்டு, அதன் சங்கிலித் தொடரை அவர்களால் துண்டிக்க முடிந்தது.