ஆசியாவிலேயே முதல்முறையாக தாய்வான் நாட்டு அரசு ஒரே பாலினத்தவர் திருமணத்தை சட்டப்பூர்வமாக மாற்றியுள்ளது.
ஒரே பாலினத்தவர் திருமணம் செய்து கொள்வது என்பது உலகின் சில நாடுகளில் ஏற்கனவே சட்டபூர்வமான ஒன்றாக இருந்தாலும் ஆசிய நாடுகளில் இதுபோன்ற அறிமுகம் கூட இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இன்று தாய்வான் அரசு ஒரே பாலினத்தவர் திருமணத்தை சட்டபூர்வமாக்கியுள்ளது. இதன்மூலம் திருமணம் செய்து கொள்ளும் ஒரே பாலினத்தவர் தங்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்து கொள்ள முடியும்.
இன்று தாய்வான் நாட்டு தலைநகர் தாய்பெயில் குடியரசுத் தலைவர் மாளிகையில் வெளியாகும் அறிவிப்பை காண ஒரே பாலின திருமண ஆதரவாளர்கள் பலர் மாளிகை முன்பு கூடினர். மேலும், அந்நாட்டின் பல இடங்களில் அரசின் இந்த முடிவிற்கு ஆதரவளித்து மக்கள் பலர் கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்தினர்.
இதுகுறித்து தாய்வான் குடியரசுத்தலைவர் திசாய் இங் வென் ” உண்மையான சமதர்மத்தை நோக்கி தாய்வான் மிகப்பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது மற்றும் இது தாய்வானை மேலும் சிறந்த நாடாக மாற்றும்” என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.