நியூயார்க், ஜூலை 4- உயிர்க்கொல்லி கிருமியாக அறியப்படும் எச்.ஐ.வி. கிருமியை அழிக்கும் மருந்தை கண்டறிய, உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் நடந்து வரும் நிலையில், எலியில் இருந்து எச்.ஐ.வி. கிருமியை முற்றிலும் அகற்றி அமெரிக்காவின் நெப்ரஸ்கா பல்கலைக்கழகம் சாதனை புரிந்து உள்ளது. மனித உயிருக்கு உலை வைக்கும் இந்த அபாயகரமான நோய் முதன்முதலில் 1981-ம் ஆண்டு டிசம்பரில் கண்டறியப்பட்டது. 1983-ல் பாரிஸ் நாட்டை சேர்ந்த லுக் மாண்டேக்னியர் என்ற ஆய்வாளரும் மற்றும் அமெரிக்காவில் உள்ள ராபர்ட் கேலோ என்ற ஆய்வாளரும் எய்ட்ஸ் நோய்க்குரிய வைரசினை தனித்தனியாகக் கண்டறிந்தனர். 1986-ல் இந்த வைரசுக்கு மனிதன் முயன்று பெற்ற நோய் என்றும் எதிர்ப்பாற்றல் தேய்வு என்றும் பெயரிட்டனர். எச்.ஐ.வி கிருமி உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களை முதலில் தாக்குகிறது. பின்னர், நாட்கள் செல்லச்செல்ல ஜீன்களில் கலந்து விடுகிறது. அந்த வைரஸ் நேரடியாக தற்காப்பு வெள்ளை அணுக்களின் எண்ணிக்கைப் பெருக்கத்தை தடுத்து நோய் எதிர்ப்பு ஆற்றலை முற்றிலுமாகச் சீர்குலைப்பதுதான் அதன் தீவிரப் பண்பு. எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த தற்போது வரை மருந்துகள் கண்டறியப்படவில்லை. உலகம் முழுவதும் பல ஆராய்ச்சியாளர்கள் இதற்காக கடுமையாக முயன்று வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், எலியில் இருந்து எச்.ஐ.வி கிருமியை அகற்றி அமெரிக்காவின் நெப்ரஸ்கா பல்கலைக்கழக மருத்துவ மைய ஆராய்ச்சியாளர்கள் சாதித்துள்ளனர். எச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்ட ஒரு எலியை சோதனைக்குள்ளாக்கி புதிதாக கண்டறியப்பட்ட மருந்தை அதற்கு செலுத்தி, எலியின் ஜீன்-களில் இருந்து எச்.ஐ.வி கிருமியை அகற்றியுள்ளனர். எச்.ஐ.விக்கான தீர்வு கிடைப்பதில் இது முதல் வெற்றி என்று கூறப்படுகிறது. தற்போது, எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்கள் ஏ.ஆர்.டி எனும் கூட்டு மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்கின்றனர். இந்த சிகிச்சை முழுவதும் நோய்த்தொற்றில் இருந்து காப்பாற்றாது என்றாலும், பாதிக்கப்பட்டவர்களில் வாழ்நாளை நீட்டித்து அவர்கள் இயல்பாக வாழ வழி செய்கிறது. எலிகள் மீதான சோதனையை CRISPR-Cas9 என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜீன்களை மாற்றி அமைப்பது இந்த சோதனையின் முக்கிய அம்சம்.