tamilnadu

img

கம்யூனிஸ்ட் இயக்கம் வீறுகொண்டு எழும், உழைப்பாளி மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும்... கே.பாலகிருஷ்ணன் பேச்சு

நாமக்கல்:
கம்யூனிஸ்ட் இயக்கம் தனது நீண்டதியாக அனுபவத்திலிருந்து வீறுகொண்டுஎழும், உழைக்கும் மக்களின் உரிமைகளைப் மீட்டெடுத்து பாதுகாக்கும் என, லட்சம் மரக்கன்றுகள் நடும்விழாவை துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சூளுரைத்தார். 

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வெண்ணந்தூர் பகுதிக் குழுவின் சார்பில் அக்டோபர் 7 முதல் 17 ஆம் தேதி வரை ஒரு லட்சம் மரம்நடும் விழா புதனன்று பட்டணம் பகுதியில் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். பகுதிச் செயலாளர் கோ.செல்வராஜ் வரவேற்றுப் பேசினார். இதைத்தொடர்ந்து மரம் நடும் விழாவை காணொலிக் காட்சி வாயிலாக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:

1917 நவம்பர் புரட்சியின் மூலம் சோவியத் மண்ணில் ஜார் ஆட்சி வீழ்த்தப்பட்டுபாட்டாளி வர்க்கத்தின் மக்களாட்சியை மாமேதை லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி அமைத்தது. இது உலகம் முழுவதும் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளின் விடுதலைப் போராட்ட வீரர்களை ஈர்த்தது. இந்தியாவில் பிரிட்டிஷாரை வீழ்த்த கம்யூனிச கொள்கை ஏந்தி போராட தீர்மானித்த 7 இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் 1920 அக்டோபர் 17 ஆம் தேதியன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையை தாஷ் கண்ட்டில் துவக்கினார்கள். இதன்பின் தாயகம் திரும்பிய அவர்களை கைது செய்த பிரிட்டிஷ் அரசு பல பத்து ஆண்டுகள் சிறையில் அடைத்து கொடுமை செய்தது.

அதேசமயத்தில், தமிழகத்தில் சிங்காரவேலர், வங்கத்தில்  முசாபர் அகமது, மும்பையில் எஸ்.ஏ.டாங்கே, லாகூரில் குலாம் முகமது ஆகியோர் தலைமையில் இயங்கிய கம்யூனிஸ்ட் குழுக்கள் பிரிட்டிஷாரை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட் டங்களை நடத்தினார்கள். சிங்காரவேலர் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ்மாநாட்டில் இந்தியாவிற்கு பூரண சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானத்தை இந்தியகம்யூனிஸ்டுகள் முன்வைத்தனர்.பிரிட்டிஷ் அரசு  பெஷாவர், கான்பூர்,மீரட், சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை சதி வழக்கு என அடுக்கடுக்கான சதிவழக்குகளை போட்டு இந்திய கம்யூனிஸ்டுகளை சிறையிலடைத்து சித்திரவதை செய்தது.பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நாடு விடுதலை பெறும் வரை கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தது. அதேநேரம், விடுதலைக்குபோராடிக் கொண்டே நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து, பண்ணை அடிமைத்தனத்தை எதிர்த்து சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்து, நிலமற்றவர்களுக்கு நிலஉரிமையை வலியுறுத்தி தொழிலாளர் களை திரட்டி, தொழிற்சங்க உரிமைகளை சட்டங்களை வலியுறுத்தி போராட்டக் களம் கண்ட இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம்.இந்திய விடுதலைக்குப் பின்னால், உழுபவனுக்கே நிலம் வேண்டும்; சமூகஒடுக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும்; தொழிலாளர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முழக்கத் தோடு ஹைதராபாத் நிஜாமை எதிர்த்து தெலுங்கானாவில் வீரஞ்செறிந்த போராட்டம், கீழவெண்மணியில் பண்ணைஅடிமை தினத்தை எதிர்த்த வீரஞ்செறிந்தபோராட்டம் நடத்தினோம். நமது போராட் டத்தின் விளைவாக தமிழகத்தில் எண்ணற்ற தொழிலாளர் நலச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சட்டம், பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம், நில சீர்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.இதேபோல், இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் போராடிய இயக் கம் கம்யூனிஸ்ட் இயக்கம். அதன் விளைவாகவே சென்னை ராஜதானி தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தியாவில் அவரவர் தாய்மொழி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழி ஆக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து போராடிய இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம்.இந்தியாவில் தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்கு, நீர் ஆதாரங்களை உருவாக்குவதற்கு, உலக சோஷலிச நாடுகளை தொடர்பு கொண்டு திட்டங்கள் நிறைவேற பாடுபட்ட இயக்கம் கம்யூனிஸ்ட்இயக்கம். போராடிப் பெற்ற உரிமைகள் தற்போது பறிக்கப்படுகின்றன. தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. தற்போது நாட்டில் நிலவும் ஊரடங்கை பயன்படுத்தி மக்கள் விரோத சட்டங்களை வேக, வேகமாக மத்தியில் ஆளும் மோடியின் பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது. இதேபோல், மத துவேசநடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் மத ஒற்றுமையை பாஜக அரசு சீர்குலைக்கிறது .இவர்களை எதிர்த்து தீரத்துடன் நாம் போராட வேண்டும்.இந்தியாவில் நிலவும் வேலையின் மைக்கு, வறுமைக்கு சோசலிசம் மட்டுமே தீர்வைத் தர முடியும், முதலாளித்துவம் அல்ல என்ற முழக்கத்தை முன்வைத்து நாம் போராட வேண்டும். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று உலகிற்கு சொல்லும் செய்தி, சோஷலிச நாடுகள் மீண்டெழுந்து விட்டன; அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள்மற்றம் தனியார்மயத்தை பின்பற்றுகின்ற நாடுகள் மீள முடியவில்லை என் பதுதான். ஆகவே, தனியார்மயமும், முதலாளித்துவமும் ஒருபோதும் உலக மனிதஇனத்தைக் காப்பாற்றாது என்கிற செய்திதான் இந்த வைரஸ் தொற்று உலகத்திற்குஉணர்த்திய செய்தியாக மாறி இருக்கிறது.

நூற்றாண்டு கண்ட இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் தனது நீண்ட தியாக அனுபவத்திலிருந்து வீறுகொண்டு எழும். உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். நூற்றாண்டு மரம் நடு விழா நடத்தும் நாமக்கல் மாவட்ட குழுவிற்கும், ராசிபுரம் வெண்ணந்தூர் பிரதேச குழுவிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.முன்னதாக, இந்த மரம் நடும் நிகழ் விற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் எம்.ஜி.ராஜகோபால், என்.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி வாழ்த்துரை வழங்கினார். முடிவில், எம்.ரங்கசாமி நன்றி உரையாற்றினார்.இந்த துவக்க நிகழ்வை தொடர்ந்து அக்டோபர் 17 ஆம் தேதி வரை கட்டனசம்பட்டி, புதுப்பாளையம், பில்லா நல்லூர், குருக்கபுரம், தொப்பபட்டி, சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பொன் பரப்பிபட்டி, அலவாய்ப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற இருக்கிறது.