tamilnadu

img

நுண் நிதி நிறுவனங்களின் அழுத்தம் - விசைத்தறி தொழிலாளி தற்கொலை

நாமக்கல் அருகே நுண் நிதி நிறுவனங்கள் கொடுத்த நெருக்கடியால் விசைத்தறி தொழிலாளி ஞானசேகர் என்பவர் தற்கொலை. தற்கொலைக்கு முன்பு, தனது மகன், மகள் மற்றும் மனைவிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வட்டமலை பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர். இவர் விசைத்தறி கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் மற்றும் மனைவி உள்ளனர். தற்பொழுது தொழில் சரிவர அமையாததால் 5 நுண் நிதி நிறுவனங்களிடம் ஐந்து லட்சம் ரூபாய் தவணைத் திட்டத்தின் கீழ் கடனாக பெற்றுள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக தவணைத் தொகையை சரியாக செலுத்த முடியாத சூழ்நிலையில், 5 நுண் நிதி  நிறுவன ஊழியர்களும் ஞானசேகரன் குடும்பத்தை தகாத வார்த்தைகளில் திட்டி உள்ளனர். இதனால் மனமுடைந்த ஞானசேகரன், வெள்ளிக்கிழமை அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் ஞானசேகர் உடலை கைப்பற்றி, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட ஞானசேகர் நுண் நிதி  நிறுவனங்களிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால், தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது மகன், மகள் மற்றும் மனைவியை தமிழக முதல்வரும், மாவட்ட ஆட்சியரும் பாதுகாக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்ததுடன், 5 தனியார் நுண் நிதி  நிறுவனங்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளது தெரிவித்துள்ளது.
இதை அடுத்து, ஞானசேகர் தற்கொலை வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்து, 5 தனியார் நுண் நிதி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும், அதன் ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பெருமாள் தலைமையில் அக்கட்சியினர் குமாரபாளையம் காவல் நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.