பெங்களூரு,பிப்.19- பாலியல் புகாரில் சிக்கியுள்ள போலிச்சாமியார் நித்தியானந்தாவை கைது செய்ய கர்நாடகாவின் ராம்நகர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பிடதியில் போலிச்சாமியார் நித்யானந்தா சாமியாரின் தியான பீட ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் புகாரில் நித்யானந்தா கைது செய்யப்பட்டார். அவருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன் பிறகு அவர், கீழ்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் விசாரணைக்காக நேரில் ஆஜராகவில்லை.
இந்நிலையில், ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா மீதான வழக்கு விசாரணை புதனன்று நடைபெற்றது. அப்போது இன்றைய விசாரணையின் போது நித்தியானந்தாவின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை ராம்நகர் நீதிமன்றம் உறுதி செய்தது. அத்துடன் நித்தியானந்தாவை உடனே கைது செய்யவும் ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நித்தியானந்தா குறித்து தகவல் தெரிவிக்க ஏற்கனவே இண்டர்போல் போலீசார் ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்திருந்தனர். நித்தியானந்தாவை கண்டுபிடிக்க முடியாவிட்டால் ரெட் கார்னர் நோட்டீஸ் மூலம் அவரை கைது செய்யவும் கர்நாடகா போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறப்படு கிறது.