tamilnadu

img

மக்களின் துயர் துடைக்காத முதல்வரின் வருகை... ரப்பர், முந்திரி, மீன் தொழிலாளர்கள் ஏமாற்றம்.....

நாகர்கோவில்:
ரப்பர் இறக்குமதியால் விலைவீழ்ச்சியிலிருந்து அந்த தொழில்வீட்சி, அரசு ரப்பர் கழகம் ஊதியஉயர்வு அளிக்காமல் தொழிலாளர் குடும்பங்கள் அவதி, கச்சா முந்திரி கிடைக்காமல் முந்திரி தொழிலாளர்களுக்கு வேலை இல்லை, மீனவர்களின் உயிர்பலி,கடல்நீரால் சீரழியும் குடியிருப்புகள் என  மாவட்டத்தின் எந்த பிரச்சனைகளுக்கும் குமரி மாவட்டத்திற்கு முதல்வரின் வருகை ஆறுதலைக்கூட அளிக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர்ஆர்.செல்லசுவாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:குமரி மாவட்டத்தின் கணிசமான பகுதி மக்கள் ரப்பர்விவசாயத்தையும் பால்வடிப்பையும் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். மத்திய அரசு பெருமுதலாளிகளுக்கு தங்குதடையற்ற ரப்பர் இறக்குமதி செய்து கொள்ள அனுமதிப்ப தால் கடும் விலை வீழ்ச்சியால் விவசாயிகளும் பால்வடிப் தொழிலாளர்களும் அவதிப்பட்டு வருகிறார்கள். கேரள அரசு ரப்பர்விவசாயிகளுக்கு ஆதார விலைநிர்ணயித்து மானியம் வழங்கிவருகிறது. தமிழக  முதல்வரின் குமரி மாவட்ட வருகை தங்களுக்கு ஏதேனும் நிவாரணம் அளிக்கக் கூடும் என நம்பிய விவசாயிகளும் தொழிலாளர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அரசு ரப்பர் கழகத்தில்பணியாற்றும் தொழிலாளர்களுக் கான ஊதிய உயர்வு ஒப்பந்தம்தொடர்பான பேச்சுவார்த்தை 4ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் முதல்வரை சந்தித்து தொழிலாளர் பிரச்சனை குறித்து அவரதுகவனத்துக்கு தொழிற்சங்க தலைவர் கொண்டு சென்றனர். ஆனாலும் முதல்வர் இது குறித்து வாய்திறக்காமல் வந்து திரும்பிவிட்டார்.  இதுபோல் முந்திரிதொழில் நலிவு குறித்தும் தொழிலாளர்கள் வேலை இழப்புகுறித்தும் கண்டுகொள்ள வில்லை.நீண்ட கடற்கரையை கொண்ட குமரி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மீன்பிடி தொழிலை ஆதாரமாககொண்டுள்ளனர். தேங்காப்பட்ட ணம் மீன்பிடி துறைமுகம் பாதுகாப்பற்றதாக உயிர்பலி வாங்கி வருகிறது. கடந்த 2 மாதங்களில்5 பேர் படகு கவிழ்ந்து உயிரிழந்துள்ளனர். அழிக்கால், கோவளம், மார்த்தாண்டம்துறை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களுக்குள் அடிக்கடி கடல் அலைகள் புகுந்து கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முதல்வரும்  கண்டுகொள்ளாமல் சென்றது பெருத்த ஏமாற்றமாகும்.

அதேநேரத்தில் முதல்வர் வருகையால் குமரி மாவட்ட மக்கள் ஏராளமான நன்மைகள் பெற்றிருப்பதாக அதிமுகவினர் மாவட்டம் முழுவதும் விளம்பரம் செய்துள்ளனர். குறிப்பாக நாகர்கோவில் நகரத்தில் போஸ்டர் ஒட்டக்கூடாது என மாநராட்சி ஆணையரால் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி முடிவு செய்யப்பட்டது. ஆனால், மாநகர் முழுவதும் அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் முதல்வர் வருகை, அதிமுகவினரின் நன்றி அறிவிப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆளும் கட்சிக்கு ஒரு நியதி மற்றவர்களுக்கு வேறு நியதி என்கிற மாநகராட்சியின் நிலைபாட்டை கைவிட்டு ஜனநாயக ரீதியாக அனைத்து இயக்கங்களும் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.