tamilnadu

குமரி மாவட்டத்தில் கன மழை...

நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து வந்தது.இந்தநிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக செவ்வாயன்று காலை முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.குமரி மாவட்டத்தில், நாகர்கோவில், பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி ,புத்தேரி,தாழாக்குடி, கொட்டாரம் போன்ற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்துஅதிகரித்துள்ளது.

அதன்படி, பேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளுக்கு 1,700 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை செவ்வாயன்று இரவுக்குள் 40 அடியை எட்டிவிடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படிஅதிகபட்சமாக மாவட்டத்தில் சுருளோடு பகுதியில் 5 சென்டி மீட்டர் மழையும், கன்னிமாரில் 4 சென்டி மீட்டர் மழையும், கொட்டாரத்தில் 3.5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் குளுகுளு சீதோசன நிலை நிலவி வருகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும்கனமழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளது.