tamilnadu

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தால் நியாய விலைக் கடைகளில் குவியும் பிரச்சனைகள்... தமிழக முதல்வர் தலையிடக் கோரி மனு

நாகர்கோவில்:
நியாயவிலைகடை பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என தமிழக முதல்வரை குமரி மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் (சிஐடியு) கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.சௌந்தர்ராஜ் அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நியாயவிலை கடைகளுக்கு அக்டோபர் 1 ஆம்தேதி முதல் பயோ மெட்ரிக் முறை அமுல்படுத்தப்பட்டது. பல பகுதிகளில் நெட்ஒர்க் பிரச்சினை உள்ளது. எந்த பகுதியில் எந்தசிம் சக்தியாக செயல்படுகிறதோ அந்த பகுதிகளில் அந்தந்த சிம் வழங்கப்பட வேண்டும். மலைப்பகுதி மற்றும் குக்கிராமங்களில் எந்த சிம்மும் செயல்படவில்லை. இணைய சர்வர்பிரச்சினைகளை போக்க றேம் சக்தி கூட்டப்படவேண்டும். பலமணி நேரம் பொருட்கள் வழங்க முடியவில்லை. வயதானவர்களுக்கு கைரேகை பதிவதில்லை. இதனால் பொருட்களை வழங்க பெரும் சிரமம்உள்ளது. ஸ்மார்ட் அட்டையில் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் மாற்றியவர்களுக்கு புதிய எண்  இணைக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும். எந்த கடையிலும் எந்த பொருளும் வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் ரேசன் கடைகளில் இவ்வசதி ஏற்படுத்தப்படவில்லை. இது பொது மக்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. கிட்டங்கியிலிருந்து வரும் பொருட்கள்மிக குறைவாக உள்ளது. குறிப்பாக சீனி மிகவும் குறைவாக உள்ளது. இப்பிரச்சினைகளை போக்க எங்களுடைய நெடுநாள் கோரிக்கையான பொட்டலம் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடமாடும் நியாயவிலைக்கடைகளுக்கு தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும். அனைத்து நியாயவிலைகடைகளுக்கும் எடையாளர் நியமிக்க வேண்டும். அதிக வேலைப் பளுவால் நியாயவிலைகடை பணியாளர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. பெண்கள் வேலைபார்க்கும் பல நியாய விலைக்கடைகளுக்கு கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். நியாயவிலை கடைஊழியர்களின் சம்பளம், பணிவரன்முறை உள்ளிட்ட பிரச்சினைகள் மீது உரிய தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.