நாகர்கோவில்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டக்குழு உறுப்பினரும், மாவட்ட சிஐடியு துணைச் செயலாளரும், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளரும், திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய உறுப்பினருமான சகாய ஆன்றணி கடந்த 7-ஆம் தேதி இரவு சமூகவிரோதிகளால் மிகக் கடுமையாக தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தாக்கிய சமூக விரோதிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்த கொடூர செயலை கண்டித்தும், இச்செயலை செய்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் சிஐடியு மற்றும் இந்திய கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பில் வேர்க்கிளம்பி சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கட்டுமான தொழிலாளர்சங்க மாவட்டத் தலைவர் கே.செல்லப்பன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.அண்ணாதுரை, சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.தங்கமோகன், மார்க்சிஸ்ட் கட்சி வட்டாரச்செயலாளர் ஆர்.வில்சன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் ஆர்.ரவி, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பி.பெருமாள் ஆகியோர் பேசினர். சிஐடியு நிர்வாகிகள் ஜி.சந்திரபோஸ், எஸ்.அந்தோணி, பொன்.சோபனராஜ், கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் எப்.ஜான், அஸீஸ் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் உட்படஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.