தரங்கம்பாடி, மே 12-இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தரங்கம்பாடி அருகே பொறையாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் தரங்கம்பாடியை ஒட்டியுள்ள கேசவன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் மகள்கள் கவியரசி(22), கலையரசி(20). அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகள் அனுஷ்யா(20), மனோகரன் மகள் சரிதா(24) மற்றும் பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த அபிநயா(21) ஆகிய ஐந்து பேரும்பொள்ளாச்சியில் நூற்பாலை ஒன்றில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு வந்த இவர்கள் ஐந்து பேரும், கடந்த ஆறாம் தேதி இரவு பொள்ளாச்சி செல்லகேசவன்பாளையத்திலிருந்து பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்து சென்றனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்று கவியரசி, கலையரசி,அனுசியா, அபிநயா ஆகியோர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள், காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் கவியரசி மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் கவியரசி சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார். இதையடுத்து கேசவன்பாளையத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மக்கள்,காரில் வந்தவர்கள் இளம் பெண்களை கடத்தமுயன்றதில் படுகாயமடைந்த கவியரசி உயிரிழந்ததாகக் கூறி பொறையாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தரங்கம்பாடி தாசில்தார் சுந்தரம் மற்றும் அதிகாரிகள், மக்களுடன் பேச்சு நடத்தினர். இதில் 2 நாளில் காரில்வந்தவர்களை கைது செய்து, விபத்தா அல்லதுபெண்களை கடத்தும் முயற்சியா? என்பதுகுறித்து விசாரணை நடத்தி அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஅதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச்செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர் டி.சிம்சன் ஆகியோர் கேசவன்பாளையம் பகுதிக்கு சென்று அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினர். இது குறித்து பி.சீனிவாசன் கூறும்போது, பல இடங்களில் விபத்து ஏற்பட்டாலோ, ஆபத்தான சம்பவங்கள் ஏற்பட்டாலோ கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகளை காவல்துறைகைது செய்கிறது. ஆனால் பொறையார் காவல்துறை, சம்பவம் நடந்து பல நாட்கள் கடந்தபிறகும் அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்குரியது. உடனடியாக இளம் பெண்ணின் மர்ம மரணத்திற்குநீதி வேண்டும் என வலியுறுத்தினார்.