tamilnadu

img

ஊராட்சிகளின் உரிமைகளை சீர்குலைக்க துணிந்த எஸ்.பி.வேலுமணி பதவி விலக வேண்டும்.. ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

நாகப்பட்டினம்:
ஊராட்சி மன்றங்களின் ஒப்புதல் இல்லாமல் விடப்பட்ட சாலைஅமைக்கும் டெண்டரை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஊராட்சிகளின் உரிமைகளை சீர்குலைக்க துணிந்த வெட்கக்கேடான இச்செயலுக்கு பொறுப்பேற்று  உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவி விலக வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் சனியன்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். சந்திப்பின் போது அவர் கூறியதாவது: ஊராட்சி மன்றங்களின் ஒப்புதல் இல்லாமலேயே ஊரகப் பகுதிகளில் ரூ.2369 கோடிக்கு சாலை அமைக்க விடப்பட்ட டெண்டரை உயர்நீதி மன்றம் ரத்து செய்திருக்கிறது. பஞ்சாயத்துராஜ் சட்டத்திற்கு புறம்பாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அலுவலர் மூலமாக தன்னிச்சையாக சாலை மேம்பாட்டுத் திட்டங்களை தேர்வுசெய்யும் பேக்கேஜ் டெண்டரான கமிஷன் டெண்டரை  நீதிமன்றம் ரத்துசெய்திருக்கிறது.  ஊராட்சிகளின் உரிமைகளை சீர்குலைக்க துணிந்த வெட்கக்கேடான இச்செயலுக்கு பொறுப்பேற்று  உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி .வேலுமணி பதவி விலக வேண்டும். உரிமைகளை பறிப்பதை தடுத்த நீதிமன்ற உத்த
ரவை வரவேற்கிறோம். 

கொரோனா தடுப்பு நடவடிக்கையிலும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதிலும் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார். பாஜககைகாட்டும் கட்சிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் கூறியிருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜி.ராமகிருஷ்ணன், மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஆணவத்தில் பாரதியஜனதா கட்சியினர் பேசி வருவதாககண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் எந்த ஒரு தொகுதியிலாவது தனித்து நின்று பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என கூறிக்கொண்டே முதுகெலும்பை உடைக்கும் வகையில் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக மூன்று சட்டங்களையும், தொழிலாளர்களுக்கு எதிராக 3 சட்டங்களையும் கொண்டு வந்திருப்பதை கண்டித்து வரும் நவம்பர் 26 ஆம்தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.மேலும் வேளாண் சட்டங்கள் குறித்து தவறுதலாக சிலர் கூறுகின்றனர் என தமிழ்நாடு காவிரிநீர் பாசனவிவசாயிகள் நல உரிமை பாதுகாப்புசங்க பொதுசெயலாளர் மன்னார்குடிரெங்கநாதன் கூறி இருக்கிறார். அவருக்கு ஒரு வேண்டுகோள். அந்த 3 சட்டங்களையும் மறுவாசிப்பு செய்துவிட்டு பேசவும் என்றுகேட்டுக் கொண்டார். கடந்த ஜூன் மாதம் முதல் மேட்டூர்அணை 5 முறை 100 அடியை தொட்டபோதும் கடைமடை பகுதிகளில் இன்னமும் முறையாக தண்ணீர் வரவில்லை. நீர் வருவதற்கான உரிய நடவடிக்கை இல்லையெனில் போராட்டங்களை நடத்துவோம் என்றார். 

இச்சந்திப்பின் போது மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம்,மாநிலக்குழு உறுப்பினர் வீ.மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் நாகைமாலி ஆகியோர் உடனிருந்தனர்.