tamilnadu

img

பாலிதீன் ஷீட்டிற்குள் தஞ்சமடைந்த புளியந்துறை ரேஷன் கடை கட்டடம்

சீர்காழி, ஆக.25- சீர்காழி அருகே புளியந்துறை கிராமத்தில் ரேஷன் கடை கட்டடத்தின் மேற்கூரை பாலிதீன் பேப்பரால் மூடப்பட்டு அவல நிலையில் உள்ளது.  நாகை மாவட்டம் சீர்காழி அருகே புளியந்துறை கிராமத்தில் உள்ள ரேஷன் கடை சுமார் 20 ஆண்டுக்கும் மேல் பழமை வாய்ந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்தக் கட்டிடத்தின் உள்பகுதியின் மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளதால் மழை நீர் கசிந்து உள்ளே வருகிறது. கட்டிட சுவர்களிலும் விரிசல் விழுந்துள்ளது.  இங்கு வைக்கப்பட்டுள்ள அத்தியாவசியமான பொருட்கள் பாதுகாப்பின்றி உள்ளன. அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சேதமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ரேஷன் கடையின் கட்டிடம் மிகவும் மோசமாக இருந்தும், புதிய கட்டிடம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கட்டிடத்தை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மகேந்திரப்பள்ளி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்தக் கட்டிடத்தின் மேற்கூரையின் பாலிதீன் தாள் போடப்பட்டு மூடப்பட்டுள்ளது.  இக்கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக பாலிதீன் தாள் கொண்டு மூடப்பட்டிருப்பது அவலமான ஒன்றாகக் இருக்கிறது என்று நுகர்வோர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே இந்த பாதுகாப்பற்ற ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.