தரங்கம்பாடி, ஆக.29- நாகை மாவட்டம் மயிலாடுதுறை பழமையான நகரங்களில் ஒன்று. மாவட்டத்தின் அதிக வருவாய் ஈட்டும் வர்த்தக மையமாகவும் விளங்குகிறது. ஆனால் இந்நகரில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலைய நீடிக்கிறது. குறிப்பாக சாலை வசதிகள், நகரின் அவலமாக உள்ள அரசு தலைமை மருத்துவமனை, பேருந்து நிலையம் என அடிப்படை தேவைகள் எதுவுமே முறையாக இல்லை. இந்நிலையில் மயிலாடுதுறையில் கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மத்திய அரசு 20 கோடி, மாநில அரசு ரூ.15 கோடி, பொதுமக்கள் தரப்பில் 7 கோடி என ரூ.42 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. தரமற்ற குழாய்கள், தரமில்லா பணிகள் ஆகியவற்றால் கடந்த சில ஆண்டுகளாக நகரப்பகுதி முழுவதும் தொடர்ந்து ஆபத்தான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. 20 அடி ஆழ பள்ளம் கடந்த 1 ஆண்டில் மட்டும் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் பாதாளச் சாக்கடைக் குழாய் உடைந்து ஆபத்தான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தரங்கம்பாடி சாலை, சின்னக்கடைத் தெரு உள்ளிட்டவை பள்ளங்களின் சாலைகளாக உள்ளன. இந்நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு தரங்கம்பாடி சாலை சுமைதாங்கி பகுதியில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து சாலை உள் வாங்கி 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை வட்ட செயலாளர் மேகநாதன் கூறும்போது, நாள் தோறும் ஒரு பகுதியில் சாலை உள்வாங்குவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் உடைப்புகளிலிருந்து கழிவு நீர் வெளியேறுவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. வழக்கம் போல தற்காலிக பழுது பார்க்கும் பணியை செய்யும் நகராட்சி நிர்வாகம் முழுமையாக ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்றார். ஒருபுறம் மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் சூழலில் மறுபுறம் நகரம் முழுவதும் பாதாளச் சாக்கடையில் ஆபத்தான பள்ளங்கள் ஏற்பட்டு மக்களை அச்சுறுத்துகிறது.